ஓமிக்ரான் வகை கிருமித்தொற்றை சிங்கப்பூர் எதிர்நோக்கிவரும் வேளையில் ஊழியர்கள் கூடுதல் நேரம் வேலை செய்வது அவசியமாகலாம் என்று முதலாளிகள், கவனிப்பாளர்கள் ஆகிய இரு தரப்பினரும் கூறுகின்றனர். நிறுவனங்களைத் தொடர்ந்து இயங்கவைக்க இந்த நிலை உருவாகலாம் என்று அவர்கள் சொல்கின்றனர்.
தற்போதைய சூழலால் வேலை, தனிப்பட்ட வாழ்க்கை ஆகிய இரண்டுக்கும் உள்ள வேறுபாடு குறைந்துவரும் வேளையிலும் இந்நிலை எழக்கூடும். மோசமான நோயை ஏற்படுத்தும் சாத்தியம் குறைவு என்றாலும் ஓமிக்ரான் வகை கொவிட்-19 கிருமி வேகமாகப் பலரிடையே பரவக்கூடிய ஆற்றல் கொண்டது. இதனால் ஊழியரணியில் கிருமித்தொற்றுக்கு ஆளான பலர் இயங்காமல் போகக்கூடும். எனவே, மற்றவர்கள் கூடுதல் நேரம் வேலை பார்க்கவேண்டிய நிலைமை எழலாம்.
கொள்ளைநோய்ப் பரவல் தொடங்கியதிலிருந்து ஏற்கெனவே சிங்கப்பூரில் இரண்டில் ஓர் ஊழியர் கூடுதல் நேரம் வேலை பார்க்க நேரிட்டது என்று இம்மாதம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நடத்திய கருத்தாய்வு ஒன்று தெரிவித்தது. 1,000 பேருக்கு மேல் பங்கேற்ற இந்தக் கருத்தாய்வில் நடுநிலை ஊழியர்களுக்கே ஆக அதிக வேலைச் சுமை இருப்பதும் தெரியவந்தது. வீட்டிலிருந்து வேலை பார்ப்பதில் இருக்கும் சவால்கள், வேலையிலிருந்து விலகிய சக ஊழியர்களுக்கும் சேர்த்து செயல்படுவது போன்றவை கருத்தாய்வில் பங்கேற்ற சிலர் முன்வைத்த பிரச்சினைகள்.
அரசாங்கத் துறையைப் பொறுத்த வரை, இதுபோன்ற பிரச்சினைகளைக் கையாள சில முயற்சிகளை எடுக்கலாம் என்று பொதுச் சேவைப் பிரிவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
"வருங்காலத்தில் கொவிட்-19ஐ சகித்துக்கொண்டு வாழும்போது வீட்டிலிருந்து வேலை பார்ப்பது, அலுவலகத்தில் வேலை செய்வது ஆகிய இரண்டையும் அரசாங்கத் துறை பின்பற்றவுள்ள வேளையில், வேலை, தனிப்பட்ட வாழ்க்கை ஆகிய இரண்டுக்கும் வேறுபாடு குறைவதை சரியாகக் கையாளாவிட்டால் அது பெரிய பிரச்சினையாக உருவெடுக்கலாம்," என்று அவர் குறிப்பிட்டார்.

