சிலி, கொலம்பியா, மெக்சிகோ, பெரு ஆகிய நாடுகளைக் கொண்ட குழுவுடன் சிங்கப்பூர் தடையற்ற வர்த்தக உடன்பாட்டைச் செய்துகொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் உலகின் எட்டாவது ஆகப் பெரிய பொருளியலான இக்குழுவுடன் சிங்கப்பூருக்குக் கூடுதல் தொடர்பு ஏற்படும்.
'பிஏஎஸ்எஃப்டிஏ' எனும் 'பசிபிக் கூட்டமைப்பு-சிங்கப்பூர்' ஒப்பந்தம், சிலி, மெக்சிகோ, கொலம்பியா, பெரு ஆகியவறக்கைக் கொண்ட 'பசிபிக் அலயன்ஸ்' கூட்டமைப்புக்கும் சிங்கப்பூருக்கும் இடையே கையெழுத்தாகியுள்ள முதல் நேரடி தடையற்ற வர்த்தக உடன்பாடு. இந்தக் கூட்டமைப்பின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பு 2.6 டிரில்லியன் வெள்ளிக்கும் அதிகம்.
"பசிபிக் கூட்டமைப்புக்கும் சிங்கப்பூருக்கும் இடையே உள்ள பங்காளித்துவத்தில் இது ஒரு மைல்கல். இவ்விரு வட்டாரங்களுக்கும் இடையில் பலர் நினைப்பதைவிட அதிகம் தொடர்புள்ளது," என்று பசிபிக் கூட்டமைப்பு மாநாட்டில் முன்பதிவு செய்யப்பட்ட காணொளி வழி பிரதமர் லீ சியன் லூங் குறிப்பிட்டார்.
"நாங்கள் இருக்கும் வட்டாரங்களில் நாம் ஆற்றும் பங்கை மேம்படுத்த பசிபிக் கூட்டமைப்புடன் இணைந்து செயல்பட ஆவலாக இருக்கிறோம்," என்றும் திரு லீ சொன்னார்.

