பகுதிநேர நடன ஆசிரியர் ஒருவர் இரண்டு சிறுவர்களை வெவ்வேறு நேரங்களில் அவர்களின் தொடக்கப் பள்ளிகளில் மானபங்கப்படுத்தியிருக்கிறார்.
குற்றவாளியான அந்த 42 வயது சிங்கப்பூர் ஆடவருக்கு மூவாண்டுகள் 10 மாதச் சிறைத் தண்டனையும் ஆறு பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன.
மூன்று மானபங்கக் குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார். பாதிக்கப்பட்ட சிறுவர்களின் அடையாளத்தைப் பாதுகாக்க குற்றவாளியின் பெயரை வெளியிட அனுமதி வழங்கப்படவில்லை.
2016ஆம் ஆண்டு நடுப்பகுதியில் அப்போது 10 வயதான சிறுவனை ஆடவர் மானபங்கப்படுத்தினார். 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வேறொரு பள்ளியில் ஒரு 10 வயது சிறுவனை அவர் மானபங்கப்படுத்தியதும் நீதிமன்ற விசாரணையில் தெரியவந்தது.
அதற்குப் பிறகு 2020ஆம் ஆண்டு அதே சிறுவனை மீண்டும் மானபங்கப்படுத்தினார்.
பாதிக்கப்பட்ட இரு சிறுவர்களும் 2020ஆம் ஆண்டு பாலியல் விழிப்புணர்வு வகுப்புகளுக்குச் சென்ற பிறகு தங்களின் ஆசிரியர்களிடமும் பெற்றோரிடமும் நடந்ததைப் பற்றித் தெரியப்படுத்தினர்.
அதற்குப் பிறகு காவல்துறையினரிடம் புகார்கள் கொடுக்கப்பட்டன.
தனது ஆசிரியர்கள் பட்டியலிலிருந்து அந்த ஆடவர் நீக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது அவரை எந்தப் பள்ளியும் நியமிக்கவில்லை என்றும் கல்வி அமைச்சு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸுக்கு அளித்த அறிக்கையில் குறிப்பிட்டது.
"மாணவர்களுக்குப் பாதுகாப்பான கற்றல் சூழலை வழங்க கல்வி அமைச்சு கடமைப்பட்டுள்ளது," என்று கல்வி அமைச்சின் பேச்சாளர் கூறினார்.

