2007க்கு பிறகு கடந்த ஆண்டு சிங்கப்பூரில் ஆக அதிக மழை பெய்ததாக சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு கனமழை தீவைப் புரட்டிப் போட்டது. புக்கிட் தீமா உள்ளிட்ட பல பகுதிகளில் பலமுறை திடீர் வெள்ளம் ஏற்பட்டது.
தென்கிழக்காசியாவில் கூடுதல் மழையைக் கொண்டுவரும் ‘லா நினா’ பருவநிலை நிகழ்வு, 2007லும் கடந்த ஆண்டிலும் இடம்பெற்றது.
சிங்கப்பூரில் பருவநிலை குறித்து வானிலை ஆய்வு மையம் இன்று வெள்ளிக்கிழமை (ஜனவரி 28) வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஆண்டு தீவு முழுவதும் சராசரியாக 3,167.7 மில்லிமீட்டர் மழை பெய்ததாகக் கூறியது.
2007ல் சராசரியாக 3,266.1 மில்லிமீட்டர் மழை பெய்திருந்தது. மழைநீர் தகவல் சேகரிப்பு முறை 1980ல் தொடங்கியதுமுதல், ஆக அதிக மழை பதிவாகியிருப்பது 2007ல்தான்.
“2021ன் பெரும்பகுதியில் லா நினா நிகழ்வு இடம்பெற்றிருந்ததால், வழக்கத்தைவிட அதிக மழை பெய்தது,” என்று வானிலை ஆய்வு மையம் கூறியது.
‘லா நினா’வுக்கு எதிர்மறை நிகழ்வானது ‘எல் நினோ’. அதனால் தென்கிழக்காசியாவில் பொதுவாக வெப்பமான, வறட்சியான வானிலை ஏற்படுகிறது.
‘எல் நினோ’வால் உலகளாவிய வெப்பநிலை குறுகியகாலத்திற்கு அதிகரிக்கும். மற்றொருபுறம், ‘லா நினா’வால் நேருக்கு மாறான தாக்கம் ஏற்படும்.