உயர்நிலைக் கல்வி முடித்த மாணவர்களின் கூட்டு மாணவர் சேர்க்கைத் திட்டத்தின் முடிவுகள் அடுத்த மாதம் 4ஆம் தேதி காலை 9 மணிக்கு வெளிவரும் என்று கல்வி அமைச்சு நேற்று அறிவித்தது.
குறுஞ்செய்தி அல்லது கல்வி அமைச்சின் இணையப்பக்கம் மூலம் முடிவுகளை மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம்.
அண்டுதோறும் நடைபெறும் கூட்டு மாணவர் சேர்க்கைத் திட்டத்தின் வழி தொடக்கக் கல்லூரிகள், மில்லேனியா கல்விக் கழகம், சிங்கப்பூரில் உள்ள ஐந்து பலதுறைத் தொழிற்கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆகியவை வழங்கும் பாடத் திட்டங்களில் மாணர்கள் சேரலாம்.
தொடக்கக் கல்லூரி, மில்லேனியா கல்விக் கழகத்தில் சேர்ந்து பயில இடம் கிடைக்கும் மாணவர்கள் அடுத்த மாதம் 7ஆம் தேதி காலை 7.30 மணிக்கு அவர்களுக்குக் கிடைத்திருக்கும் பள்ளிக்குச் செல்ல வேண்டும்.
அன்று அவர்களால் பள்ளிக்குச் செல்ல முடியாவிடில், பள்ளியுடன் தொடர்புகொண்டு அங்கு சேர்ந்து பயிலப்போவதை உறுதி செய்துகொள்ளலாம், அவ்வாறு செய்யும் மாணவர்களுக்கான இடம் பாதுகாக்கப்படும் என்று கல்வி அமைச்சு கூறியது.
பலதுறைத் தொழிற்கல்லூரி அல்லது தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் சேர்ந்து பயில இடம் கிடைக்கும் மாணவர்கள் அதற்குப் பதிவு செய்வது குறித்த விவரங்கள் கொண்ட கடிதங்கள் அனுப்பிவைக்கப்படும்.
வேறு தொடக்கக் கல்லூரிக்கு மாற விரும்பும் மாணவர்கள், அவர்கள் செல்ல விரும்பும் தொடக்கக் கல்லூரியுடன் தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
மாணவர்களின் மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் அந்தந்த தொடக்கக் கல்லூரிகளிடம் உள்ளது. தொடக்கக் கல்லூரியில் உள்ள இடங்கள், மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் ஆகியவற்றைப் பொறுத்து முடிவெடுக்கப்படும்.
மில்லேனியா கல்விக் கழகத்துக்கு மாற விழைவோர் அப்பள்ளியுடன் தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலம் தொடர்புகொள்ள வேண்டும்.
வேறொரு பலதுறைத் தொழிற்கல்லூரி அல்லது தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் இரண்டு ஆண்டுகால உயர் நைடெக் பாடத் திட்டத்துக்கு மாற விரும்புபவர்கள் கூட்டு மாணவர் சேர்க்கைப் பயிற்சி மேல்முறையீடு இணைய வாசல் மூலம் விண்ணப்பம் செய்யலாம்.
கூட்டு மாணவர் சேர்க்கைப் பயிற்சி மூலம் எவ்விதப் பள்ளியிலும் இடம் கிடைக்காத மாணவர்கள் அதே இணையவாசல் மூலம் மேல்முறையீடு செய்யலாம் என்று கல்வி அமைச்சு கூறியது.
பிப்ரவரி 4ஆம் தேதி காலை 9 மணி முதல் பிப்ரவரி 9ஆம் தேதி மாலை 4 மணி வரை மேல்முறையீடு செய்யலாம்.
மேல்முறையீட்டுக்கான முடிவுகள் அடுத்த மாதம் 22ஆம் தேதி வெளிவரும்.

