அவென்யூ 1, 4, 5, 8ல் வசிப்போர் வசதியாக எம்ஆர்டி நிலையம் போய் வரலாம்
தெம்பனிஸ் அவென்யூ 1, 4, 5, 8 ஆகியவற்றில் வசிப்பவர்கள் இப்போது மிகவும் பாதுகாப்பாக, எளிதாக, வசதியாக தங்கள் வீடுகளில் இருந்து தெம்பனிஸ் வெஸ்ட் எம்ஆர்டி நிலையத்துக்கும் 'அவர் தெம்பனிஸ் ஹப்' மையத்திற்கும் சைக்கிளோட்டிச் செல்ல முடியும்.
நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று 4 கி.மீ. சைக்கிளோட்டப் பாதையைத் திறந்துவிட்டது.
வீடுகள், பள்ளிக்கூடங்கள், முக்கிய வசதி இடங்கள், தெம்பனிஸ் மத்திய பூங்கா, தெம்பனிஸ் பசுமை காட்டுப் பூங்கா போன்ற பசுமை இடங்களை அந்தப் பாதை இணைக்கிறது.
தெம்பனிஸ் நகருக்குள் இப்போது மொத்தம் 25 கி.மீ. தொலைவுக்குச் சைக்கிளோட்ட வழியும் பூங்கா இணைப்புப் பாதையும் இருப்பதாக சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி நேற்று புதிய சைக்கிளோட்டப் பாதையைத் திறந்துவைத்தபோது குறிப்பிட்டார்.
தெம்பனிஸ் சைக்கிளோட்டப் பாதை, தெம்பனிஸ், தெம்பனிஸ் ஈஸ்ட், தெம்பனிஸ் வெஸ்ட் ஆகிய மூன்று எம்ஆர்டி நிலையங்களை இணைக்கிறது.
தெம்பனிஸ் சைக்கிளோட்டப் பாதையின் முதல்கட்ட நிறைவைக் குறிக்கும் வகையில் நேற்று புதிய பாதை திறக்கப்பட்டது. அந்தப் பாதையைக் குடியிருப்பாளர்கள் பலரும் ஏற்கெனவே பயன்படுத்த தொடங்கிவிட்டார்கள் என்று அமைச்சர் மசகோஸ் தெரிவித்தார்.
பாதை நெடுகிலும் பாதுகாப்புக் குறியீடுகளும் வேகத்தைக் கட்டுப் படுத்துவதற்கான அடையாளங்களும் பொறிக்கப்பட்டு உள்ளன.
சைக்கிளோட்டிகள், பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அந்தப் புதிய சைக்கிளோட்டப் பாதை நெடுகிலும் ஐந்து பாதசாரி கடப்பிடங்கள் உள்ளன.
இப்போது இருக்கும் 19 சைக்கிள் கடப்பிடங்களையும் சேர்த்து புதிய வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு இருப்பதால் சைக்கிளோட்டிகள் தெம்பனிசில் பாதுகாப்புமிக்க, தடையற்ற சைக்கிளோட்ட அனுபவத்தைப் பெறலாம் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.
தெம்பனிஸ் சைக்கிளோட்டப் பாதைக் கட்டமைப்பு பற்றி 2017ல் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, அந்தக் கட்டமைப்பு இந்த ஆண்டு வாக்கில் ஏறத்தாழ 21 கி.மீ. தொலைவுக்கு விரிவுபடுத்தப்படும்.
இப்போது தெம்பனிசில் 14 கி.மீ. சைக்கிளோட்டப் பாதையை ஆணையம் அமைத்து முடித்து இருக்கிறது. கார்களைத் தவிர்க்கும் வகையில் 2030ல் 1,300 கி.மீ. சைக்கிளோட்டப் பாதையைக் கொண்டிருக்கும் திட்டங்கள் வகுக்கப் பட்டன.
இப்போது சிங்கப்பூரில் 500 கி.மீ. சைக்கிளோட்டப் பாதைகள் உள்ளன என்று போக்குவரத்துக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் பே யாம் கெங் தெரிவித்து உள்ளார்.
அங் மோ கியோ, பீஷான், புக்கிட் பாஞ்சாங்கிலும் புதிய சைக்கிளோட்டப் பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
ஆணையம் சென்ற அக்டோபரில் தாமான் ஜூரோங்கில் 5.6 கி.மீ. நீளத்திற்கான சைக்கிளோட்டப் பாதையை அமைத்தது.
அது ஜூரோங் லேக் மாவட்டத்தில் 15 கி.மீ. கட்டமைப்புடன் இணைந்து இருக்கிறது.

