விடுமுறையில் 1,000 தனியார் மருந்தகங்கள் செயல்படும்
சிங்கப்பூரில் சீனப் புத்தாண்டு விடுமுறை காலத்தில் நாளை முதல் பிப்ரவரி 2ஆம் தேதி வரை பல்வேறு நேரத்தில் 988 தனியார் மருந்தகங்கள் திறந்து இருக்கும். அவற்றில் 523 பொதுச் சுகாதார ஆயத்தநிலை மருந்தகங்களாக இருக்கும். 324 மருந்தகங்கள் கொவிட்-19 பரிசோதனைகளை நடத்தும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
விழாக்காலத்தின்போது சிறார்கள் உட்பட இலேசான உடல்நலப் பிரச்சினை உள்ளவர்கள் அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இருமல், காய்ச்சல், சுவை இழப்பு போன்ற பாதிப்பு உள்ளவர்கள் பொதுச் சுகாதார ஆயத்தநிலை மருந்தகங்களுக்குச் செல்லலாம்.
தீவு முழுவதும் ஒன்றிணைந்த 11 பரிசோதனை நிலையங்களும் தொடர்ந்து செயல்படும். முன்பதிவு செய்துகொண்டு மக்கள் அவற்றை நாடலாம்.
நெஞ்சுவலி, கட்டுப்படுத்த முடியாத ரத்தப்போக்கு போன்ற உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய நிலையில் இருப்போரே மருத்துவமனையின் விபத்து, அவசரகால சிகிச்சை பிரிவை நாடவேண்டும் என்றது அமைச்சு.
முயிஸ் ஆலோசனை
மருத்துவ காரணங்களுக்காக கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளாத முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை தொழுகையில் கலந்துகொள்வதைத் தவிர்த்துக் கொண்டு தனிப்பட்ட முறையில் தொழுகையில் ஈடுபட வேண்டும் என்று முயிஸ் எனப்படும் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் ஆலோசனை தெரிவித்து இருக்கிறது.
வெள்ளிக்கிழமை தொழுகையில் கலந்துகொள்வதால் அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் கிருமி தொற்றக்கூடிய ஆபத்து ஏற்படக்கூடும் என்பதை இந்த மன்றத்தின் முஃப்தி அலுவலகம் சுட்டிக்காட்டி இருக்கிறது.
முயிஸ் அமைப்பும் பள்ளிவாசல்களும் தொடர்ந்து கொவிட்-19 சூழ்நிலையைக் கண்காணித்து அதற்கேற்ப தேவையான சரியாக்கங்களைச் செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் பரிசீலனை
மோசடி குறுஞ்செய்திகளுக்கு எதிரான அரசாங்கத்தின் பதிவேட்டில் அனைத்து அமைப்புகளும் சேர்ந்து, தாங்கள் குறுஞ்செய்தியை அனுப்ப விரும்பும் பெயர்களை அந்தப் பதிவேட்டில் பதியும்படி செய்வது பற்றி தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் பரிசீலித்து வருகிறது.
தவறாக பயன்படுத்தப்படுவதில் இருந்து அவர்களைப் பாதுகாக்கும் முயற்சியாக இந்த ஏற்பாடு குறித்து பரிசீலிக்கப்படுகிறது என்று அந்த ஆணையம் தெரிவித்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டு உள்ளது.
ஓசிபிசி வங்கி வாடிக்கையாளர்களில் கிட்டத்தட்ட 470 பேர் கடந்த டிசம்பர் மாதம் போலியான குறுஞ்செய்திகளை நம்பி குறைந்தபட்சம் $8.5 மில்லியன் தொகையை இழந்தனர். இந்தச் சூழலில் ஆணையம் இவ்வாறு பரிசீலித்து வருகிறது.
மோசடிகளில் $1 பில்லியன் இழப்பு
சிங்கப்பூரில் மோசடிகள் தொடர்பில், பொதுமக்கள் கடந்த 5½ ஆண்டுகளில் ஏறக்குறைய $1 பில்லியன் தொகையை இழந்துவிட்டதாகத் தெரியவருகிறது என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
மோசடிப் பேர்வழிகள், 2020ல் சாதனை அளவாக $268.4 மில்லியன் தொகையை ஏமாற்றிவிட்டதாக சட்ட, உள்துறை அமைச்சர் கா சண்முகம், மோசடிகள் பற்றி நாடாளுமன்றத்தில் அளித்த எழுத்து மூலமான பதிலில் குறிப்பிட்டு இருந்தார். சிங்கப்பூரில் 2011 முதலே இணையக் காதல் மோசடிகளே மிக அதிகமாக பலரையும் ஏமாற்றி அதிக தொகையைப் பறிக்கும் ஒன்றாக இருந்து வருகிறது. 2020ல் இத்தகைய மோசடிகளுக்கு ஆளானவர்கள் இழந்த தொகை $33.1 மில்லியன்.
இத்தகைய மோசடிகள் 2008ல் முதன்முதலாக தலைகாட்டியதாக நம்பப்படுகிறது. இணையம் வழி நடக்கும் மோசடிகளில் பெரும்பாலானவற்றுக்கு வெளிநாடுகளில் இருந்து செயல்படுவோர் காரணமாக இருப்பதால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்து பணத்தைக் கைப்பற்றுவது அதிகாரிகளுக்கு மிகவும் சிரமமாக இருக்கிறது. என்றாலும் அவர்கள் மோசடிகளைத் துடைத்து ஒழிக்கவும் குற்றவாளிகளைப் பிடிக்கவும் தொடர்ந்து தீவிரமாக பாடுபட்டு வருகிறார்கள்.

