சிங்கப்பூரின் ஆகப் பழமையான இரண்டாவது கலங்கரைவிளக்கம் ராஃபிள்ஸ் கலங்கரைவிளக்கம்.
அது, முன்பு ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் பொதுமக்களுக்குத் திறந்து விடப்பட்டது. இப்போது காலக்கிரம முறைப்படி வருகையாளர்களை வரவேற்க கலங்கரை விளக்கம் காத்து இருக்கிறது.
பொதுமக்கள் அந்தக் கலங்கரைவிளக்கத்திற்குச் செல்ல இப்போது முன்பதிவு செய்யலாம்.
சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் ஏற்பாட்டில் அங்கு செல்வதற்கான பயணங்கள் இடம்பெறுகின்றன. அதற்கான சுற்று லாவை 'லயன் ஹார்ட்லேண்டர்ஸ்' நிறுவனம் நடத்துகிறது.
போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரன் நேற்று அந்தக் கலங்கரைவிளக்கத்திற்குச் ெசன்று சுற்றுலாவைத் தொடங்கி வைத்தார்.
மேலும் பல சிங்கப்பூரர்களுக்கு கடல்துறையை அறிமுகப்படுத்துவதும் சிங்கப்பூரின் கடல்துறை பாரம்பரியத்தை அவர்கள் புரிந்துகொள்ளுமாறு செய்வதும் இந்தச் சுற்றுலாத் திட்டத்தின் நோக்கம் என்று அமைச்சர் தெரிவித்தார்.
கடல்துறை தொடர்பான கல்வித் திட்டங்களில் சேர்ந்து இருக்கும் 14 மாணவர்களும் அமைச்சருடன் நேற்றுப் பயணத்தில் கலந்துகொண்டனர். ராஃபிள்ஸ் கலங்கரைவிளக்கத்துக்கான சுற்றுலா இளைய சிங்கப்பூரர்களை ஈர்க்கும். கடல் தொழில்துறையில் உள்ள வேலை வாய்ப்புகள் பற்றி அவர்கள் தெரிந்துகொள்ள இது உதவும் என்று திரு ஈஸ்வரன் நம்பிக்கைத் தெரிவித்தார்.
மரினா சவுத் பியரில் இருந்து அந்த 5 மணி நேர பயணம் தொடங்கும். மரினா சவுத் பியரில் ஆணை யத்தின் சிங்கப்பூர் கடல்துறைக் கலைக்கூடத்தை வருகையாளர்கள் கண்டு பல விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம். அங்கிருந்து புறப்பட்டு 75 நிமிடம் பயணம் செய்து புலாவ் சடுமு தீவை அடையலாம். அந்தத் தீவில்தான் ராஃபிள்ஸ் கலங்கரைவிளக்கம் உள்ளது.
அதற்கான சுற்றுலா ஒவ்வொரு மாதத்திலும் 2வது, 4வது சனிக்கிழமைகளில் இடம்பெறும். இணையம் வழி முன்பதிவு செய்யலாம். 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு.
கட்டணம் $62.71. சிங்கப்பூரில் செயல்படும் கல்வி நிலையங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு $34.70.

