பாலர்பள்ளிகளில் 3-6 வயது உள்ள பிள்ளைகளுக்கு இட, சாதன வசதிகள் மேம்பாடு
பல பாலர்பள்ளிகள், சிறப்பு உதவி தேவை உள்ள மூன்று முதல் ஆறு வயது உள்ள பிள்ளைகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் தங்களுடைய இட, சாதன வசதிகளை அதிகப்படுத்தி வருகின்றன.
இளம்பருவ மேம்பாட்டு முகவை என்ற அமைப்பின் தலைமையில் ஒரு முன்னோடித் திட்டமாக பாலர்பள்ளிகள் இந்த முயற்சிகளை எடுத்து இருக்கின்றன.
பொருத்தமான வளர்ச்சி அடைய உதவி தேவைப்படும் நிலையில் இருக்கும் பிள்ளைகளுக்குச் சிறப்பு ஆதரவை வழங்கும் வகையில் முழுநேர நிபுணர்களும் சுகாதார நிபுணர்களும் அந்தப் பள்ளிகளில் வேலைகளில் அமர்த்தப்பட்டு இருக்கிறார்கள்.
இதற்கு வகைசெய்யும் 'எல்லாரையும் உள்ளடக்கும் ஆதரவுச் செயல்திட்டம்' என்ற ஒரு திட்டம் சென்ற அக்டோபரில் தொடங்கப்பட்டது. அதன்படி பாலர்களுக்குப் பள்ளிக்கூடத்திலேயே சேவைகள் கிடைப்பதால் பிள்ளைகளின் பெற்றோர் பாலர்பள்ளிகளுக்கும் சிறார் தொடக்க உதவி நிலையங்களுக்கும் இடையில் செல்ல வேண்டிய பயண நேரம் மிச்சப்படும்.
ஃபெர்ன்வேல் புளோக் 455ல் செயல்படும் மசெக சமூக அறநிறுவனத்தின் 'ஸ்பார்க்கல்டாட்ஸ்' பாலர்பள்ளி இதற்கு தயாராகும் முதல் பாலர்பள்ளிகளில் ஒன்றாகும்.
இதுவரை இந்தப் பள்ளியில் சிறப்பு உதவி தேவைப்படும் ஏழு சிறார்கள் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் சென்ற அக்டோபரில் இருந்து புதிதாக சேர்க்கப்பட்டவர்கள்.
ஃபெர்ன்வேல் நிலையத்தில் சிறார்கள் முதலில் விளையாடி ஓய்வெடுத்துக்கொண்டு பிறகு வகுப்பறை நடவடிக்கைகளை தொடங்கும் வகையில் ஏற்பாடுகள் உள்ளன. அங்கு உடற்பயிற்சி அறை ஒன்று உள்ளது. அலங்கார விளக்குகள், இசையுடன் கூடிய அறையும் இருக்கிறது.
மேலும் மூன்று நிலையங்களில் இத்தகைய சிறார்களைச் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கின. பிப்ரவரியில் 'என்டியுசி ஃபர்ஸ்ட் கேம்பஸ்' அமைப்பு நடத்தும் மேலும் இரண்டு நிலையங்கள் இதற்கு ஆயத்தமாகிவிடும்.
பாலர்பள்ளிகள் பலதரப்பட்ட பிள்ளைகளை உள்ளடக்க வேண்டும் என்பதற்காக 2019ல் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு ஒரு பணிக்குழுவை அமைத்தது.
அந்தப் பணிக்குழு முன்வைத்துள்ள ஒரு பரிந்துரையையொட்டி இந்த முன்னோடி செயல்திட்டம் இடம்பெறுகிறது.

