கட்டுப்பாடுகளைத் தளர்த்த பல நாடுகள் கொண்டிருந்த திட்டத்துக்கு ஓமிக்ரான் தடைக்கல்லாக இருப்பதாகவும் சிங்கப்பூர் அதற்கு விதிவிலக்கல்ல என்றும் அதிபர் ஹலிமா யாக்கோப் தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 நெருக்கடிநிலை காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் சீனப் புத்தாண்டை முன்னிட்டு தளர்த்தப்படும் என்று எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தோருக்கு இது ஏமாற்றத்தைத் தந்திருப்பது தமக்கு நன்றாகப் புரிகிறது என்று அவர் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று பதிவிட்டார்.
"நமது நாடு எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி சிங்கப்பூரர்களுக்கு நன்றாகத் தெரிகிறது. அவர்கள் புரிந்துணர்வுடன் நடந்துகொள்கின்றனர். இந்த சிரமமிக்க காலகட்டத்தில் தொடர்ந்து ஒருவருக்கொருவர் ஆதரவு வழங்கி வருகின் றனர்," என்று அதிபர் ஹலிமா பாராட்டினார். சீனப் பஞ்சாகத்தின்படி இவ்வாண்டு புலி ஆண்டாகும். புலி ஆண்டை வரவேற்க சிங்கப்பூரர்கள் தயாராகி வருகின்றனர்.
"வலிமையையும் வீரத்தையும் புலி பிரதிபலிக்கிறது. கொவிட்-19 நெருக்கடிநிலைக்கு எதிரான போரில் நாம் அனைவரும் தொடர்ந்து வலிமையையுடனும் வீரத்துடன் இருக்க வேண்டும். இதன்மூலம் முன்பைவிட நாம் வலிமைமிக்கவர்களாக உருவெடுப்போம்.
"அனைவரும் மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியமாகவும் வாழ வாழ்த்துகிறேன். அனைவருக்கும் சீனப் புத்தாண்டு வாழ்த்துகள்," என்று அதிபர் ஹலிமா தெரிவித்துக்கொண்டார்.