சிங்கப்பூரில் வலது புறத்திலிருந்து வெளியேற வகைசெய்யும் ஒரே விரைவுச்சாலை மாற்றியமைக்கப்படவுள்ளது. தீவு விரைவுச்சாலையிலிருந்து கிளமெண்டி சாலை, அப்பர் புக்கிட் திமா சாலை ஆகியவற்றுக்குச் செல்வதற்கான இந்தப் பாதை இவ்வாண்டு பிற்பாதியில் மாற்றியமைக்கப்படவுள்ளது.
பாதுகாப்பை வலுப்படுத்த தீவு விரைவுச்சாலையின் 26ஏ வெளிவாயில் அகற்றப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது. புதிய 26ஏ வெளிவாயில் தீவு விரைவுச்சாலையின் இடது புறம் அமைக்கப்படும்.
புதிய வெளிவாயில் தாழ்வாக அமைந்திருக்கும். தீவு விரைவுச்சாலைக்குக் கீழ் ஒரு சுரங்கத்தின் வழி வாகனமோட்டிகள் வலது புறத்துக்குச் செல்வர்.
32.7 மில்லியன் வெள்ளி மதிப்புகொண்ட இந்த திட்டத்தை 'மெகாஸ்டோன் ஹோல்டிங்ஸ்' நிறுவனம் ஏற்று நடத்துகிறது. இத்திட்டம் நிறைவடையும் நிலையில் உள்ளது.
இடது புறத்திலிருந்து வெளியேறுவதற்கான தற்காலிகப் பாதை 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் அமைக்கப்பட்டது. மூடப்பட்டிருந்த அந்தப் பாதை சாலைப் பணிகள் நிறைவடைந்த பிறகு திறக்கப்படும்.
சாலைப் பணிகளைச் சென்ற ஆண்டு முடிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கொள்ளைநோய்ப் பரவல் சூழலால் ஏற்பட்ட மனிதவளப் பற்றாக்குறையால் ஏற்பட்ட பாதிப்பைத் தொடர்ந்து இப்பகுதியின் சாலைப் பணிகள் இவ்வாண்டு இறுதிக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியது.


