உற்பத்தி, சேவைகள் துறைகளில் வர்த்தக நிலவரம் குறித்த அச்சம் நிலவுகிறது
உற்பத்தி, சேவைகள் துறைகளில் நிறுவனங்களிடையே வர்த்தக ரீதியான நம்பிக்கை குறைந்து காணப்படுவது தெரியவந்துள்ளது. புதிய கொவிட்-19 கிருமி வகைகள் தலைதூக்குவது, விநியோகச் சங்கிலி எதிர்நோக்கும் சவால்கள் ஆகியவை இதற்கான காரணங்கள்.
சென்ற ஆண்டின் கடைசி காலாண்டைவிட இவ்வாண்டின் முற்பாதியில் வரத்தக நிலவரம் சாதகமாக இருக்கும் என்று எட்டு விழுக்காட்டு உற்பத்தி நிறுவனங்கள் நம்புகின்றன. பொருளியல் மேம்பாட்டு வளர்ச்சிக் கழகம் நடத்திய கருத்தாய்வில் இந்த விவரம் தெரியவந்தது. சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் நடத்தப்பட்ட கருத்தாய்வில் இந்த விகிதம் 16 விழுக்காடாகப் பதிவானது.
சேவைகள் துறையில் 14 விழுக்காட்டு நிறுவனங்கள் இவ்வாண்டின் முற்பாதி நிலவரம் சாதகமாக இருக்கும் எனக் கருதுகின்றன. இதற்கு முன் நடத்தப்பட்ட கருத்தாய்வில் பதிவானதைக் காட்டிலும் இந்த விகிதம் ஐந்து விழுக்காடு குறைந்துள்ளது. கடந்த ஆண்டு இறுதியின் பண்டிகைக் காலத்தின்போது அடுத்த ஆறு மாதங்களுக்கான முன்னுரைப்பு இடம்பெற்றதாக புள்ளி விவரத் துறை தெரிவித்தது.
போக்குவரத்துப் பொறியியல் துறையில்தான் நம்பிக்கை ஆக அதிகமாக இருக்கிறது. இத்துறையின் 54 விழுக்காட்டு நிறுவனங்கள் வரும் ஜூன் மாதம் வரை நிலைமை சாதகமாக இருக்கும் என்று நம்புகின்றன. இந்தத் துறையில் இடம்பெறும் ஆகாயவெளிப் பிரிவில் விமானங்களைப் பழுதுபார்க்கும் நடவடிக்கைகள், மறுசீரமைப்பு வேலைகள் உள்ளிட்டவற்றுக்கான தேவை தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலான நாடுகள் எல்லைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்திவருவது இதற்குக் காரணம் என்று பொருளியல் வளர்ச்சிக் கழகம் கூறியது.
உயிரியல் மருத்துவத் துறையிலும் நிறுவனங்கள் நம்பிக்கையுடன் உள்ளன. இவ்வாண்டின் முற்பாதி சாதகமாக அமையும் என்று இத்துறையில் 16 விழுக்காட்டு நிறுவனங்கள் நம்புகின்றன. குறிப்பாக மருத்துவத் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சி இதற்குக் காரணம்.
கணினி நிரலாக்கம் போன்ற சேவைகளுக்கான தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் வர்த்தக நிலவரம் சாதகமாக அமையும் என தொடர்பு, தகவல் துறை எதிர்பார்ப்பதாகப் புள்ளி விவரத் துறை குறிப்பிட்டது. உலகளவில் பொருளியல் சூழல் மேம்படும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் நிதி, காப்புறுதித் துறைக்கும் வர்த்தக நிலவரம் சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

