சீனப் புத்தாண்டுக்கான சிறப்புப் படமாக உருவாகியுள்ள 'ரீயூனியன் டின்னர்' என்ற சீனமொழித் திரைப்படம் இம்மாதம் 20ஆம் தேதி திரைக்கு வந்தது. உள்ளூர் இயக்குநர் ஓங் குவோ சின்னின் இயக்கத்தில் படைக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தில், 'ஏகே' என்ற நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் 31 வயது 'தாஸ்' எனும் தர்மதாசா டி. தருமசேனா நடித்துள்ளார்.
சமூக ஊடகங்களின் மூலம் பிரபலமடைந்தும் வசந்தம், 'சேனல் 8' ஒளிவழிகளின் நாடகத் தொடர்களில் நடித்தும், நைட் அவல் சினிமேட்டிக்ஸ் நிறுவனத்தில் நகைச்சுவைக் கலைஞராக இருந்தும், இளையர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளார் தாஸ். குறிப்பாக, 2020ஆம் ஆண்டில், பிரதமர் திரு லீ சியன் லூங்கின் கொவிட்-19 பொது உரையை நகையாடிய 'மீம்' எனப்படும் நகைச்சுவைக் காணொளியில் இவர் பிரதமரைப் போல் நடித்தது, திரு லீயின் கவனத்தையே ஈர்த்தது. நான்கு மொழிகளிலும் பிரதமரின் உரையை நகையாடி இணையத்தில் பிரபலமான தனது 'மேஜிக் கப்' காணொளியைக் கண்ட பிரதமர், அதை ரசித்ததாகத் தன்னிடம் சமூக ஊடகம் வாயிலாகக் கூறியதாகவும் தாஸ் பகிர்ந்துகொண்டார்.
ஆங்கிலம், சீனம், மலாய், தமிழ் ஆகிய சிங்கப்பூரின் நான்கு அதிகாரத்துவ மொழிகளிலும் சரளமாகப் பேசக்கூடிய அரிய ஆற்றலைக் கொண்டுள்ளார் தாஸ். முழுக்க முழுக்கச் சீன மொழியில் எடுக்கப்பட்ட 'ரீயூனியன் டின்னர்' திரைப்படத்தில், பல்லாண்டு அனுபவம் கொண்ட சிறந்த நடிகர்களுடனும் கலைஞர்களுடனும் நடிப்பதில் சற்று பயம் இருந்தபோதும், அதை போக்கும் வண்ணம் நல்லதோர் உற்சாகமான, ஒற்றுமையான சூழலில் இப்படம் உருவானதாகத் தமிழ் முரசிடம் கூறினார் தாஸ். பன்மொழி நகைச்சுவைக் கலைஞராக வலம்வரும் அவர், இந்த திரைப்பட அனுபவம் தனது மற்ற படைப்புகளைவிட மிக வித்தியாசமாகவும் சுவாரசியமாகவும் இருந்ததாகச் சொன்னார்.
"இப்படத்தில் என்னை மிகவும் கவர்ந்தது, 'ஸ்லாப்ஸ்டிக்' எனப்படும் மிகைப்படுத்தப்பட்ட நகைச்சுவையோ, குறிப்பிட்ட நபர்களைப் புண்படுத்தும் வகையில் உள்ள நகைச்சுவையோ எதுவும் இல்லாததுதான். நான் ஓர் இந்தியர் என்ற அடிப்படையில் என்னை இப்படத்திற்காக இயக்குநர் ஓங் தேர்ந்தெடுக்கவில்லை. எனது கதாபாத்திரமான 'ஏகே'வை வலிய அவர் இக்கதையில் புகுத்தவும் இல்லை. சீனமொழி பேசக்கூடிய ஒரு நல்ல நகைச்சுவைக் கலைஞர் என்ற முறையில் என்னைத் தேர்ந்தெடுத்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. நகைச்சுவை ஒரு புறம் இருக்க, சிறார் முதல் பெரியவர் வரை அனைவரும் பார்க்கவேண்டிய ஒரு படமாக இதை நான் கருதுகிறேன். ஏனெனில், எல்லோருக்கும் பொதுவான குடும்பப் பிணைப்பை இக்கதை வலியுறுத்திச் சொல்கிறது." என்றார் தாஸ்.
சிங்கப்பூர் சீனர்களின் கலாசாரம் பிற நாடுகளில் வசிக்கும் சீனர்களிடமிருந்து வேறுபட்டு இருப்பதாகவும் மிகவும் தனித்தன்மை வாய்ந்ததென்றும் கூறியதோடு, இப்படத்தைக் காணும் பல்லின சிங்கப்பூரர்கள் அதைப் பற்றி மேலும் அறிந்துகொள்வர் என்று தாஸ் குறிப்பிட்டார். அத்தகைய கலாசாரம் சார்ந்த விழிப்புணர்வை ஊட்டக்கூடிய வகையில் 'ரீயூனியன் டின்னர்' திரைக்கதை அமைந்துள்ளதை அவர் சுட்டினார்.
சிங்கப்பூரின் திரைப்படத் துறையில் நகைச்சுவைக் கலைஞராக நுழைந்துள்ள ஒரு சில இந்தியர்களில் தாஸும் ஒருவர். இந்தியர்களையோ எந்த ஒரு சமூகத்தையோ தாழ்த்தும் வண்ணம் இத்திரைப்படத்தில் எந்த வசனமும் காட்சியும் இல்லாதது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அவர் கூறினார்.
பல்லின சமுதாயமான சிங்கப்பூரில் இன்னும் அதிகம் விரிவடையாமல் இருக்கும் திரைத்துறையைப் பற்றி கேட்டபோது, சிங்கப்பூரர்கள் வெளிநாடுகளில் உள்ள திரைப்படங்களின் மீது அலாதி மோகம் கொண்டுள்ளதாகவும், உள்ளூர்ப் படைப்புகளின் தரத்தைச் சற்று சந்தேகமாகவே பார்ப்பதாகவும் தாஸ் வருத்தப்பட்டார்.
"உள்ளூர்க் கலைஞர்களை நாம்தானே ஊக்குவிக்கவேண்டும்? திரையரங்குகளுக்குச் செல்லும்போது, எப்போதும் காணக்கூடிய திரைப்படங்களை மட்டும் பார்க்காமல், அவ்வப்போது உள்ளூர்ப் படைப்புகளையும் நாம் காணலாம். 'ரீயூனியன் டின்னர்' மட்டுமின்றி, 'ஆ கல்ஸ் கோ ஆர்மி' முதலிய இவ்வாண்டின் சிங்கப்பூர்த் திரைப்படங்கள் அப்படிப்பட்ட ஒரு நல்ல வாய்ப்பையும் விழிப்புணர்வையும் சிங்கப்பூரர்களிடையே ஏற்படுத்தும் என்று நம்புகின்றேன்." என்றார் தாஸ்.
'ரீயூனியன் டின்னர்', 'ரோம்-காம்' எனும் நகைச்சுவை கலந்த காதல் கதையை மையமாகக் கொண்டுள்ளது. குடும்பப் பிரச்சினைகளில் சிக்கியுள்ள படத்தின் கதாநாயகர், சந்தர்ப்பச் சூழ்நிலைகளால் சீனப் புத்தாண்டின் குடும்ப விருந்து நிகழ்வில் தனது குடும்ப உறுப்பினர்களாக நடிக்க சில நடிகர்களை உதவிக்கு அழைக்கும்பொழுது நடக்கும் நகைச்சுவை சம்பவங்கள் திரைக்கதையின் சாராம்சமாக அமைந்துள்ளன.
ஆ. விஷ்ணு வர்தினி

