வெளிப்புற சாகசச் செயல் கற்றலில் பாதுகாப்பு மேம்படுத்தப்படும்
'ஓஏஎல்' எனும் வெளிப்புற சாகசச் செயல் கற்றல் நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் மேற்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இத்தகைய நடவடிக்கைகளை வழங்கும் நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றுக்குக் கூடுதல் விதிமுறைகளை வரைவது உள்ளிட்ட முயற்சிகளின் வாயிலாக பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தப்படும்.
மலை ஏறுவது, படகோட்டம் போன்றவை வெளிப்புற சாகசச் செயல் நடவடிக்கைகளில் அடங்கும்.
உயரம் சம்பந்தப்பட்ட வெளிப்புற நடவடிக்கைகள் குறித்து கல்வி அமைச்சு மறுபரிசீலனை செய்துள்ளது. அதன் தொடர்பிலான தகவல்களைத் தனது பங்காளித்துவ அமைப்புகளுடன் உறுதிப்படுத்திய பிறகு அமைச்சு மேல்விவரங்களை வெளியிடும். ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் எழுப்பிய கேள்விகளுக்குக் கல்வி அமைச்சு இவ்வாறு பதிலளித்தது.
சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் ஈசூனில் உள்ள 'சாஃப்ரா' எனும் சிங்கப்பூர் ஆயுதப்படை மனமகிழ் மன்றத்தின் சாகசச் செயல் நடவடிக்கை மேற்கொள்ளும்போது நிகழ்ந்த விபத்தில் ஒரு 15 வயது மாணவர் மாண்டார். அது குறித்து வெளிவரவிருக்கும் காவல்துறை விசாரணை முடிவுகளும் கருத்தில்கொள்ளப்படும்.
புதிய வடிவில் ஆசியான்
பயணத் துறை சின்னம்
தென்கிழக்காசிய நாடுகளைக் கொண்ட ஆசியான் குழுமம், தனது ஆசியான் பயணத்துறை அமைப்புக்கான சின்னத்தை (படம்) மாற்றியமைத்துள்ளது. மேலும், தனது கருப்பொருளையும் மாற்றியுள்ளது.
மாற்றங்களின் மூலம் தென்கிழக்காசியாவையும் அதன் மக்களையும் பிரதிபலிக்கும் உற்சாகம், அன்பு, மீள்திறன் போன்ற அம்சங்களை வலியுறுத்த விரும்புவதாக ஆசியான் பயணத்துறை அமைப்பு செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. இந்த அமைப்பின் புதிய கருப்பொருளான 'எ டெஸ்டினேஷன் ஃபார் எவரி ட்ரீம்', இவ்வட்டாரத்தின் பன்முகத் தன்மையையும் பயணம் மேற்கொள்வதற்கான பல்வேறு வாய்ப்புகளையும் சித்திரிக்கிறது.
அமைப்பின் புதிய சின்னத்தில் 10 வட்டுகள் இடம்பெற்றுள்ளன. இவை ஆசியானில் உள்ள அனைத்து உறுப்பு நாடுகளையும் பிரதிபலிக்கின்றன.
மருத்துவ விடுப்பை நிராகரித்த தாய்
மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டு வீட்டில் இருக்குமாறு உத்தரவிடப்பட்ட ஒரு பெண் அதற்கு இணங்காமல் தனது மகனை பாலர்பள்ளிக்குக் நடந்து அழைத்துச் சென்றிருக்கிறார். மிஷெல் ஃபூ ஷி சிங் என்ற அந்தப் பெண், தனியார் வாடகை வாகனத்தில் மெக்பர்சனுக்கும் சென்றார். அதற்குப் பிறகு கிரேட் வோர்ல்டு சிட்டி கடைத்தொகுதியில் நான்கு நண்பர்களுடன் திரைப்படம் பார்த்திருக்கிறார். தனது மருத்துவ விடுப்பைப் பற்றி ஃபூ நண்பர்களிடம் தெரிவிக்கவில்லை.
இச்சம்பவம் நிகழ்ந்த மறுநாளும் மலேசியரான ஃபூ வெளியே சென்றது நீதிமன்ற விசாரணையில் தெரியவந்தது. தன் மீது சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார். வரும் மார்ச் மாதம் ஒன்பதாம் தேதியன்று ஃபூவின் குற்றச்சாட்டுகள் தொடர்பில் தீர்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமூக அளவில் 4,226 கொவிட்-19
கிருமித்தொற்று சம்பவங்கள்
சிங்கப்பூரில் நேற்று முன்தின நிலவரப்படி சமூக அளவில் 4,226 கொவிட்-19 கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த எண்ணிக்கை, கடந்த சனிக்கிழமை பதிவானதைவிட 700க்கும் மேல் குறைவு.
புதிதாகப் பதிவான கிருமித்தொற்று சம்பவங்களில் 60 பேருக்கு செயற்கையாக செலுத்தப்படும் உயிர்வாயுவின் உதவி தேவைப்படுகிறது. 12 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். புதிதாக யாரும் மரணமடையவில்லை.மொத்தம் 709 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதிய சம்பவங்களில் சுமார் 65 விழுக்காட்டினருக்கு 'ஏஆர்டி' பரிசோதனையின் மூலம் கிருமித்தொற்று ஏற்பட்டது தெரியவந்தது. இவர்கள் நோய்க்கான அறிகுறிகள் இல்லாதவர்கள் அல்லது மோசமாக நோய்வாய்ப்படாதவர்கள்.

