பல்கலைக்கழகங்களின் திட்டத்தின்கீழ் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களாக இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி, பெற்றோரின் அனுமதியை அவர்கள் பெற்றிருக்க வேண்டும்.
பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் வெளிநாடுகளுக்குச் செல்லும் மாணவர்கள், மாணவர்களுக்கான பயணக் காப்புறுதித் திட்டங்களால் பாதுகாக்கப்படுவர் என்றும் கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டால் அதற்குத் தேவையான மருத்துவச் செலவுகளை அவை பார்த்துக்கொள்ளும் என்றும் உள்ளூர் பல்கலைக்கழகங்கள் தெரிவித்தன.
"வெளிநாடு செல்லும் மாணவர்கள், பயணத் தயார்நிலை தொடர்பான கட்டாயப் பாடக்கூறு ஒன்றைப் பூர்த்தி செய்து அதில் தேர்ச்சி பெற வேண்டும். வெளிநாடு செல்வதால் கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்படும் அபாயம் இருப்பது தங்களுக்குத் தெரியும் என்று குறிப்பிடும் படிவத்தையும் பெற்றோர் அல்லது காப்பாளர்
களின் ஒப்புதல் கடிதத்தையும் மாணவர்கள் சமர்ப்பிக்க வேண்டும்," என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் செய்தித்
தொடர்பாளர் தெரிவித்தார்.
புறப்படுவதற்கு முன்பு, அவர்கள் வெளியுறவு அமைச்சிடம் இணையம் மூலம் பதிவு செய்ய வேண்டும். அவர்களது பயணத் திட்டம் குறித்த விவரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

