சாலை விபத்தில் மாண்ட பெண்ணின் குடும்பத்துக்கு ஏறத்தாழ $650,000 இழப்பீட்டுத் தொகையை வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 7ஆம் தேதியன்று சுற்றுலாப் பேருந்து ஒன்று மலேசியாவில் விபத்துக்குள்ளானது.
சிங்கப்பூரரான செரினா மாட் இட்ரிஸ் பயணம் செய்துகொண்டிருந்த பேருந்து, நெகிரி செம்பிலான் மாநிலத்தில் லாரி மீது மோதியது. மோதிய வேகத்தில் அவர் பேருந்திலிருந்து வெளியே தூக்கி எறியப்பட்டார். அப்போது
அவருக்கு 27 வயது.
தமது திருமண நாளைக் கொண்டாட கணவர், ஆண் குழந்தை, மற்ற குடும்ப உறுப்
பினர்களுடன் திருவாட்டி செரினா ஜென்டிங் மலைக்குச் சென்றுகொண்டிருந்தபோது விபத்து நிகழ்ந்தது.
விபத்து நிகழ்ந்தபோது அந்த ஈரடுக்குப் பேருந்தின் மேல் மாடியின் முதல் வரிசை இருக்கையில் திருவாட்டி செரினா அமர்ந்திருந்தார். விபத்தில் படுகாயம் அடைந்த அவர் மரணம் அடைந்தார்.
இரண்டு ஆண்டுகள் கழித்து, இழப்பீடு கோரி திருவாட்டி செரினாவின் கணவர் அகமது சுமிட்ஜா மசிரான், டிரான்ஸ்டார் டிராவல் நிறுவனத்தின் உரிமையாளர், பேருந்து ஓட்டுநர் ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடுத்தார்.
2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வழக்கின் பிரதிவாதிகள் திருவாட்டி செரினாவின் மரணத்துக்குப் பொறுப்பேற்றுக்கொண்டனர். இழப்பீட்டுத் தொகையை நிர்ணயிக்கும் வழக்குகள் கடந்த ஆண்டு நீதிபதி கண்ணன் ரமேஷ் முன்னிலையில் நடைபெற்றன.
திருவாட்டி செரினாவின் மரணத்தால் அவர் மூலம் அவரது குடும்பத்துக்குக் கிடைத்திருக்கக்
கூடிய வருமானம் இல்லாமல் போய்விட்டதை திரு சுமிட்ஜாவின் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். திருவாட்டி செரினா உயிருடன் இருந்திருந்தால் சம்பாதித்திருக்கக்கூடிய பணம், அவரது மத்திய சேமநிதிக் கணக்கில் சேர்ந்திருக்கக்கூடிய தொகை ஆகியவற்றை இழப்பீடாகக் கொடுக்க வேண்டும் என்று திரு சுமிட்ஜாவின் வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர்.
திருவாட்டி செரினா மாண்டபோது அவர் ஸ்பார்க்கல்டோட்ஸ் பாலர் பள்ளியில் குழந்தைப்
பராமரிப்பாளராகப் பணிபுரிந்தார்.
அவர் உயிருடன் இருந்திருந்தால் இவ்வாண்டு அவருக்குப் பதவி உயர்வுடன் சம்பள உயர்வும் கிடைத்திருக்கும். இழப்பீட்டுத் தொகையை நிர்ணயிக்கும்போது இவை கருத்தில்கொள்ளப்பட்டன.
அத்துடன், அவர் ஓய்வுபெறும் வயது 62ஆக இருந்திருக்கும் என்பதை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.
வரித் தொகை கழிக்கப்பட்டு, அவரது ஆண்டு வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு திருவாட்டி செரினாவின் குடும்பத்துக்கு $522,228 இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
திருவாட்டி செரினாவின் மத்திய சேமநிதிக் கணக்கிற்கு $103,953 இழப்பீட்டுத் தொகை வழங்கவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக திருவாட்டி செரினாவின் குடும்பத்துக்கு ஏற்பட்ட இதர செலவுகளுக்காக ஏறத்தாழ $24,000 வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

