பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதி இருந்தும் இன்னமும் 31,500 பேர் அதற்குப் பதிந்துகொள்ளவில்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
திங்கட்கிழமை வரையிலான இந்த நிலவரத்தை வெளியிட்ட அமைச்சு, இம்மாதம் 14ஆம் தேதியிலிருந்து அவர்கள் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டதாக எடுத்துக்கொள்ளப்படாது என்று தெரிவித்தது.
அவர்களுடைய தடுப்பூசித் தகுதி ‘கூடுதல் தடுப்பூசி தேவைப்படுகிறது’ என்ற நிலைக்கு மாற்றப்படும். அவர்கள் அனைவரும் தேசிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் ஃபைசர்-பயோஎன்டெக்/கமிர்நாட்டி அல்லது மொடர்னா தடுப்பூசி போட்டு 270 நாட்களுக்குமேல் ஆகிவிட்டது என்று அமைச்சு தெரிவித்தது.
தடுப்பூசித் தகுதி மாற்றம், மூன்று முறை சினோவேக்-கொரோனாவேக் அல்லது சினோஃபார்ம் தடுப்பூசி போட்டவர்களுக்கும் அல்லது அவசரகால பயன்பாட்டுக்கு உலக சுகாதார நிறுவனம் அனுமதித்த தடுப்பூசிகளுக்குப் பொருந்தும். ஜான்சன் அண்ட்
ஜான்சன் தடுப்பூசியை ஒரு முறை போட்டவர்கள், ஆஸ்ட்ராஸெனகா, கோவிஷீல்ட், கோவேக்சின் அல்லது நோவாவேக்ஸ் தடுப்பூசி போட்டவர்களும் இதில் அடங்குவர் என்று அமைச்சு குறிப்பிட்டது.
முன்பதிவு செய்யாதவர்களுக்குத் தொடர்ந்து நினைவூட்டு குறுந்தகவல் அனுப்பி வைக்கப்படுகிறது.
“இவர்கள் அனைவரும் பூஸ்டர் தடுப்பூசிக்குப் பதிந்துகொள்ள வலியுறுத்துகிறோம். தடுப்பூசி நிலையங்களுக்கு நேரடியாக வந்தும் தடுப்பூசி ேபாடலாம்,” என்று அமைச்சு மேலும் கூறியது.