ஆன்டிஜன் விரைவுப் பரிசோதனை (ஏஆர்டி) கருவிகளுக்கான தேவை, கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சீனப் புத்தாண்டு விழாக்காலத்தில் காணப்பட்டு வரும் இத்தேவை அதிகரிப்புக்கு ஏற்ப, தாங்கள் மேலும் இருப்புகளைக் கொண்டு வந்த வண்ணம் உள்ளதாக சில்லறை வர்த்தகங்கள் கூறுகின்றன.
விழாக்காலத்தாலும் வேலை இடங்களுக்குக் கூடுதலானோர் திரும்புவதாலும் 'கார்டியன்' போன்ற மருந்தாளர் கடைகளில் ஜனவரி மாத இடையிலிருந்து ஏஆர்டி கருவிகளுக்கான தேவை இரு மடங்காகியுள்ளதாகக் கூறப்பட்டது.
கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் காணப்பட்டதைக் காட்டிலும் ஜனவரியில் பரிசோதனைக் கருவிகளுக்கான தேவையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்படுவதாக 'டிஎஃப்ஐ' சில்லறை வர்த்தகக் குழுமப் பேச்சாளர் கூறினார். 'கார்டியன்', 'கோல்டு ஸ்டோரேஜ்', 'ஜயன்ட்' போன்ற நிறுவனங்களை உள்ளடக்கியது இக்குழுமம்.
"சந்திரப் புத்தாண்டுக்காக பிறர் வீட்டுக்குச் செல்வோர், சுயபரிசோதனை செய்துகொண்டு முன்னெச்சரிக்கையாக இருக்க விரும்பியதாலும் கடந்த வாரத்தில் ஏஆர்டி கருவிகளுக்கான தேவை அதிகரித்தது," என்றார் பேச்சாளர்.
'கார்டியன்' இணைய வர்த்தகத் தளத்தில் ஐந்து ஏஆர்டி கருவிகளைக் கொண்ட பெட்டிகளும் 25 கருவிகளைக் கொண்ட பெட்டிகளும் விற்றுத் தீர்ந்துவிட்டதைக் காண முடிந்தது. ஆனால் ஒற்றையாகவும் இரண்டாகவும் விற்கப்படும் ஏஆர்டி கருவிகள் இன்னும் இருப்பில் உள்ளன.
கடந்த இரண்டு நாள்களாக ஏஆர்டி கருவிகளுக்கான தேவை அதிகரித்துள்ளதாக 'வாட்சன்ஸ்' நிறுவனம் தெரிவித்தது. இந்த அதிகரிப்பு அதன் கடைகளிலும் அதன் இணைய வர்த்தகத் தளத்திலும் காணப்பட்டது.
கடைகளில் அடுக்கி வைக்கப்பட்ட உடனே மக்கள் அவற்றை வாங்கிவிடுகிறார்கள் என்று பேச்சாளர் தெரிவித்தார்.
இரண்டு மற்றும் அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையில் பரிசோதனைக் கருவிகளைக் கொண்ட பெட்டிகள் தீர்ந்துவிட்டதாகக் கூறப்பட்டது.
தனது பேரங்காடிகளிலும் 'யூனிட்டி' மருந்தாளர் கடைகளிலும் கடந்த ஒரு வாரமாக 'ஏஆர்டி கருவிகளுக்கான தேவை அதிகம் என்று 'ஃபேர்பிரைஸ்' நிறுவனமும் தெரிவித்தது.
"கொவிட்-19 கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளதாலும் அடிக்கடி பரிசோதனை செய்துகொள்வது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதாலும் இந்த அதிகரிப்பு காணப்படலாம்," என்று ஃபேர்பிரைஸ் பேச்சாளர் கூறினார்.
இதற்கிடையே, தற்போதைக்குப் போதுமான ஏஆர்டி கருவிகள் இருப்பில் உள்ளதென மூன்று நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு உறுதி அளித்துள்ளன.
கடந்த சில நாள்களாக 10,000க்கும் மேற்பட்ட கொவிட்-19 சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.

