ஸ்ரீ சிவன் கோயில், கொவிட்-19 தொற்று காரணமாக பிப்ரவரி 14ஆம் தேதி வரை மூடியிருக்கும்.
கேலாங் ஈஸ்ட் அவென்யூ 2ல் அமைந்திருக்கும் ஸ்ரீ சிவன் கோயிலில் கொவிட்-19 தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து அந்தக் கோயில் பிப்ரவரி 14ஆம் தேதி திங்கட்கிழமை வரை மூடப்பட்டிருக்கும் என்று இந்து அறக்கட்டளை வாரியம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று தெரிவித்தது.
ஸ்ரீ சிவன் கோயிலை இந்து அறக்கட்டளை வாரியம் நிர்வகிக்கிறது.
கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட சிலரை கோயில் வளாகத்தில் அடையாளம் கண்டிருப்பதாக வாரியம் ஃபேஸ்புக்கில் கூறியது.
"பக்தர்களின் நலனையும் பாதுகாப்பையும் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அன்றாடச் சேவைகள் ரத்து செய்யப்படும்," என்றது வாரியம்.
அத்துடன், பக்தர்களின் புரிந்துணர்வையும் ஒத்துழைப்பையும் நாடுவதாகவும் அது கூறியது.
மேல்விவரங்களுக்குப் பொதுமக்கள் இந்தக் கோயிலுடன் 67434566 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.