சாலை சந்திப்பு ஒன்றை நெருங்கிய லாரி ஓட்டுநர் கான் லியன் மின், 70, மெதுவாக வாகனத்தை ஓட்டினார். ஆனால் வலது புறமாகத் திரும்பும் முன் லாரியை நிறுத்தவில்லை. இதனால், பாதசாரிகள் கடக்கும் இடத்தில் கால்வைத்த திருவாட்டி ஓர் செங் கிம், 52, என்பவரை அந்த ஓட்டுநர் கவனிக்கவில்லை.
லாரி மோதி அந்த மாது மூன்று நாள்கள் கழித்து மருத்துவமனையில் தலைக் காயங்கள் காரணமாக உயிரிழந்தார். கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காகவும் திருவாட்டி ஓருக்கு மரணம் விளைவித்ததற்காகவும் கானுக்கு நேற்று நான்கு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
சிறையிலிருந்து விடுதலையான பின், எட்டு ஆண்டுகளுக்கு அனைத்து வாகனப் பிரிவு ஓட்டுநர் உரிமங்களை வைத்திருக்கவும் அவற்றைப் பெற்றுக்கொள்ளவும் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
பாலர் பள்ளி ஒன்றில் உதவி ஆசிரியராகப் பணியாற்றிய திருவாட்டி ஓர், தம் மகனின் சாதாரண நிலைத் தேர்வு முடிவுகளை முன்னிட்டு கொண்டாடுவதற்காக உணவு வாங்கிக்கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்து நடந்ததாகக் கூறப்பட்டது.
சம்பவத்தைக் காட்டும் கண்காணிப்பு கேமரா காணொளி நேற்று நீதிமன்றத்தில் ஒளிபரப்பப்பட்டபோது கான் தலைகுனிந்து காணப்பட்டார்.
காணொளியில் குடை ஒன்றைப் பிடித்திருந்த மாது ஒருவரை கான் ஓட்டிச் சென்ற லாரி இடிப்பதைக் காண முடிந்தது. சம்பவம் கடந்த ஆண்டு ஜனவரி 12ஆம் தேதியன்று இரவு 8.30 மணியளவில் நடந்ததாக அறியப்படுகிறது.
அச்சமயத்தில் மழை பெய்துகொண்டிருந்தபோதும் தெளிவாகப் பார்க்கும் அளவுக்குச் சாலைகள் இருந்ததாகக் கூறப்பட்டது.
விபத்து நடந்ததை அடுத்து காவலர்களுக்கு கான் தகவல் தெரிவித்தார்.
"விபத்து நடந்ததிலிருந்து கான் வருத்தப்படாத நாளே இல்லை," என்று கானின் வழக்கறிஞர் திரு லுன் கூறினார். திருவாட்டி ஓருக்கு கான் இறுதி மரியாதை செலுத்தச் சென்றதுடன் அவருடைய குடும்பத்தாரிடம் மன்னிப்பும் கேட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

