முரசொலி
உலகம் ஒவ்வொரு நாளும் மாறுகிறது. அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் தொழில்துறைகளும் உருமாறி வருகின்றன.
குறிப்பாக இந்த நூற்றாண்டில் தொழில்துறைகளின் உருமாற்றம் வேகமெடுத்து இருக்கிறது. கணினி, இணையத்தின் புழக்கம் அதிகமானதும் புத்தாக்கமும் புதுப்புது கண்டுபிடிப்புகளும் அவற்றுக்கான அவசியங்களும் தவிர்க்க இயலாமல் போனதை அடுத்து அவற்றின் விளைவுகள் தொழில்துறைகளில் எதிரொலிகளை ஏற்படுத்துகின்றன.
மின்னிலக்க முறை வந்தபோது அந்த உருமாற்ற வேகம் மேலும் கூடியது.
கொவிட்-19 கிருமி பரவி உலகையே மாற்றிய காலகட்டத்தில் தொழில்துறைக்கு அதிவேக உருமாற்றத்தைவிட்டால் வேறு வழி இல்லை என்ற நிலை வேகமாக ஏற்பட்டுவிட்டது.
இந்த மாற்றத்திற்கு ஏற்ப மாறிக்கொள்ளும் துறைகள்தான் இனி வாழ முடியும் என்ற சூழல் ஏற்பட்டுவருகிறது. தொழில்துறைகள் உருமாறுவதால் நிறுவனங்கள் தலைகீழாக மாற வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. அவை செயல்படும் விதம் அடியோடு மாற்றம் காண வேண்டிய தேவையைத் தவிர்க்க இயலாத ஒரு சூழல் தலை எடுக்கிறது.
இவை காரணமாக தொழில் நடத்தும் முதலாளி கள் மட்டுமின்றி, தொழில்துறைகளில் வேலை செய்து பொருள் ஈட்டி வாழ்க்கை நடத்தும் ஊழியர்களும் மாறிக்கொள்ள வேண்டிய அவசர அவசியம் ஏற்பட்டுவிட்டது. ஏட்டுக் கல்விப் பட்டத்தை அல்லது தொழிற்கல்விப் பட்டத்தை மட்டும் வைத்துக்கொண்டு கடைசிவரை வேலை பார்த்து வாழ்ந்துவிடலாம் என்பது இனி நடக்காத ஒன்றாகிவிட்டது.
பல புதிய தேர்ச்சிகளைக் கற்றாக வேண்டும்; அதுவும் வாழ்நாள் முழுவதும் கற்றாக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 2017ல் சராசரி வேலை ஒன்றைப் பெறுவதற்குத் தேவைப்பட்ட தேர்ச்சிகளில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு தேர்ச்சிகள் 2021ல் தேவையில்லை என்ற நிலை உருவாகி இருப்பதாக 'கார்ட்டனர்' என்ற ஓர் ஆலோசனை நிறுவனத்தின் ஆய்வு ஒன்று குறிப்பிடுகிறது.
இயற்கை வளம் இல்லாத, தன் மக்கள் வளத்தை மட்டுமே மூலாதாரமாகக் கொண்டுள்ள சிங்கப்பூர், இவற்றை எல்லாம் முன்னதாகவே உணர்ந்துகொண்டு, 2015 ஆம் ஆண்டிலேயே 'ஸ்கில்ஸ்ஃபியூச்சர்' என்ற இயக்கத்தை நடைமுறைப்படுத்தியது.
உலகிலேயே ஆகஅதிக ஆயுளைக் கொண்டுள்ள சிங்கப்பூரர்கள் ஆயுள் முழுவதும் கற்று எப்போதுமே காலத்திற்கு ஏற்ற நிலையில் இருந்துவரவேண்டும் என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்ட இந்த இயக்கம் படிப்படியாக வேகமடைந்து விரும்பிய பலனைக் கொடுத்து வருகிறது. இந்த இயக்கம் ஆதரவளிக்கும் செயல்திட்டங்களில் 2020ஆம் ஆண்டை விட 22% அதிகமாக சென்ற ஆண்டில் ஏறத்தாழ 660,000 பேர் கலந்துகொண்டனர்.
இதனால் ஏற்படக்கூடிய பலாபலன்கள் உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெரிகின்றன. தகவல்தொழில்நுட்பம், சுகாதாரப் பராமரிப்பு, நிபுணத்துவ சேவைகள் ஆகியவை தொடர்பான தேர்ச்சிகளைப் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் உதவியுடன் கற்றுக்கொண்டதன் காரண மாக பலருக்கும் நல்ல வேலைகள் கிடைத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
அதோடு மட்டுமல்ல, ஸ்கில்ஸ்ஃபியூச்சர் செயல்திட்டங்களில் ஈடுபட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை யும் சென்ற ஆண்டில் 70 விழுக்காட்டிற்கும் அதிகமாகக் கூடி கிட்டத்தட்ட 24,000 ஆகியது.
இவை ஒருபுறம் இருக்க, 10,000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் நிதி உதவியைப் பயன்படுத்தி தங்கள் ஊழியர்களுக்குப் பயிற்சி வாய்ப்புகளை வழங்கி இருக்கின்றன.
இந்த வேகத்திற்கு கொவிட்-19 தொற்றும் ஒரு காரணமாக இருக்கிறது. தொற்று காரணமாக நிறுவனங்களிடையே மின்னிலக்கமய வேகம் கூடியது. அப்படி அவை உருமாறிய காரணத்தினால் வேலைகளைப் புதிய பாணிகளுக்கு மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டது. அப்படி உருவாகும் புதிய வேலைகளைப் பார்க்க ஊழியர்களுக்குப் புதுப்புது தேர்ச்சிகள் அவசியமாயின.
கொரோனாவால் பாதிப்புக்கு உள்ளான, வேலைஇழந்துவிட்ட, பலரும் தேர்ச்சிகளை மேம்படுத்திக்கொண்டால்தான் தங்களுக்கு இனி வாழ்வு என்பதை உணர்ந்துகொண்டனர்.
புதுப்புது தேர்ச்சிகளுக்கான தேவை படுவேகமாக அதிகரிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
உலக ஊழியர்களில் 40%க்கும் மேற்பட்டவர்கள் 2025ல் புதிய தேர்ச்சிகளைக் கற்றுக்கொள்ள வேண்டி இருக்கும் என்று உலகப் பொருளியல் அமைப்பு முன்னுரைத்து இருக்கிறது.
சிங்கப்பூரில் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் இயக்கம் இதுநாள் வரை ஊக்கமூட்டும் பலன்களை உருவாக்கி வருகிறது என்றாலும்கூட, இதில் நாம் இன்னமும் நெடுந்தூரம் செல்ல வேண்டி இருக்கிறது என்பதே உண்மை. பெரும்பான்மை ஊழியர்கள் தேர்ச்சிகளை மேம்படுத்திக் கொள்ளவேண்டிய நிலையில் இருக் கிறார்கள். அதோடு சிங்கப்பூரில் செயல்படும் கிட்டத்தட்ட 280,000 சிறிய, நடுத்தர நிறுவனங்களில் 10% நிறுவனங்கள்கூட ஸ்கில்ஸ்ஃபியூச்சர் இயக்கத்தில் இன்னமும் கலந்துகொள்ளவில்லை.
சிறிய, நடுத்தர நிறுவனங்களில் ஏறத்தாழ மூன்றில் இரண்டு பங்கு நிறுவனங்கள் மின்னிலக்கமய மாற்றத்தின் தொடக்கக் கட்டத்தில் இருக்கின்றன. அவை முற்றிலும் உருமாறும்போது ஊழியருக்குப் புதிய தேர்ச்சிகள் அதிகம் தேவைப்படக்கூடும்.
சிங்கப்பூரர்கள் ஆயுள் முழுவதும் புதுப்புது தேர்ச்சிகளைக் கற்றுக்கெண்டு எப்போதுமே வேலை சந்தைக்குப் பொருத்தமானவர்களாக இருந்து வரு வதைச் சாதிக்க ஊழியர் அணியின் தேர்ச்சிகள் பரந்த அளவில் மேம்பட வேண்டும். இதில் நிறுவனங்கள் முன்னின்று தலைமை ஏற்க வேண்டும்.
ஊழியர்களிடம் காணப்படக்கூடிய குறை, நிறைகளைக் கண்டறிந்து, எதிர்காலத்தையும் கருத்தில்கொண்டு நிறுவனங்கள் பயிற்சித் திட்டங்களை வகுக்க வேண்டும், நிதியையும் ஒதுக்க வேண்டும்.
இந்த முயற்சியில் உயர்கல்வி நிலையங்களுக்கும் பெரும் பங்கு இருக்கிறது. சிங்கப்பூரில் செயல்படும் பல்கலைக்கழகங்கள் ஆண்டுதோறும் புதுப்புது பட்டதாரிகளை உருவாக்குவதோடு நின்றுவிடாமல், ஏற்கெனவே ஊழியர் அணியில் உள்ளவர்களின் தேர்ச்சிகளை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டி இருக்கும்.
ஊழியர்களின் மனப்போக்கும் மாறவேண்டும். ஒட்டுமொத்த முயற்சிகளின் பலனாக ஊழியர்கள், நிறுவனங்களின் செயல்திறன் கூடும்போது சிங்கப்பூரின் செயல்திறனும் உலகளவில் அதிகரிக்கும்.
சிங்கப்பூர் பொருளியல் எதிர்காலத்திற்கேற்ப மிக ஆற்றலுடன் திகழும். இதைச் சாதிக்கும் தேர்ச்சியும் திறனும் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் இயக்கத்துக்கு இருக்கிறது என்பதில் ஐயமில்லை.

