நேர்மையும் நாணயமும் சிங்கப்பூர் ஜனநாயகத்தின் அடிப்படை மாண்பு களாகத் தொடர்ந்து இருந்து வரு வதை உறுதிப்படுத்தும் கடமையும் பொறுப்பும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அவர்கள் பிரதிநிதிக்கும் கட்சிகளுக்கும் இருக்கின்றன என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.
உட்லண்ட்ஸ் ஹெல்த் வளாகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் அதையொட்டி பேசினார்.
நாடு எப்படி நிர்வகிக்கப்பட வேண்டும் என்பது பற்றிய வெவ்வேறான குரல்களும் யோசனைகளும் காரசாரமான விவாதிப்புகளும் இடம்பெறுவது நல்லதே என்று அவர் தெரிவித்தார்.
இருந்தாலும் அவை பொய் புரட்டுகளை அடிப்படையாகக் கொண்டவையாக இருக்கக் கூடாது என்று அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழுவின் முடிவுகள், பரிந்துரைகள் காரணமாக ஜனநாயகத்திற்குப் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று பாட்டாளிக் கட்சி கூறுவது பற்றியும் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ள கருத்துகள் தொடர்பிலும் அமைச்சர் கருத்து கூறினார்.
நாடாளுமன்ற நாயகர் தலைமை யிலான எட்டு உறுப்பினரைக் கொண்ட அந்தக் குழு, பாட்டாளிக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ரயீசா கான் நாடாளுமன்றத்தில் பொய் சொன்ன விவகாரம் பற்றி ஆராய்வதற்காக அமைக்கப்பட்டது. அந்தக் குழு கடந்த வியாழக்கிழமை ஓர் அறிக்கையை வெளியிட்டது.
திருவாட்டி கானுக்கு $35,000 அபராதம் விதிக்க வேண்டும் என்று அது பரிந்துரைத்தது.
பாட்டாளிக் கட்சித் தலைமைச் செயலாளரும் எதிர்த்தரப்பு தலைவருமான பிரித்தம் சிங், பாட்டாளிக் கட்சித் துணைத் தலைவர் ஃபைசல் மனாப் இருவருக்கும் எதிராக குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டி இருக்குமா என்பது பற்றி பரிசீலிக்கும் வகையில் அந்த இருவரையும் அரசாங்க வழக்கறிஞர் நடத்தும் புலன்விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் அந்தக் குழு பரிந்துரைத்தது.

