செந்தோசா தீவில் உள்ள மரங்களில் ஏறக்குறைய 100 உணர்கருவிகள் பொருத்தப்படவுள்ளன. மரங்கள் சாய்ந்து கீழே விழுவதைத் தடுப்பது அதன் நோக்கம்.
இதன் தொடர்பில் செந்தோசா மேம்பாட்டுக் கழகம் கடந்த திங்கட்கிழமை ஏலக் குத்தகை ஒன்றுக்கு அழைப்பு விடுத்தது. அண்மைக் காலமாக செந்தோசா தீவில் ஆண்டுக்கு எட்டு முதல் 10 மரங்கள் விழுவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கழகம் கூறியது. குறிப்பாக, கனமழைக்குப் பிறகு மரங்கள் விழுகின்றன.
இந்த உணர்கருவிகளைப் பொருத்துவதன்மூலம் மரங்கள் சாய்வதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்று கழகத்தின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
செந்தோசாவின் கடற்கரைகளிலும் சிலோசோ கோட்டை, சிலோசோ சாலை, இம்பியா வாக் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள “முதன்மையான” மரங்களில் உணர்கருவிகள் பொருத்தப்படும் என்று ஏலக் குத்தகை ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2018ல் அறிவிக்கப்பட்டு இருந்த மின்னிலக்கமய பெருந்திட்டத்தின்கீழ் தேசிய பூங்காக் கழகம் ஏற்கெனவே 1,500 உணர்கருவிகளை மரங்களில் பொருத்தியுள்ளது.