2020 முதல் 2021ஆம் ஆண்டு வரை தங்குவிடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் தாக்கப்பட்ட ஏறக்குறைய 550 சம்பவங்கள் பதிவாகின. கைகலப்புகள், வெளிநாட்டு ஊழியர்கள் சம்பந்தப்பட்ட கலவரங்கள் மூலம் அவர்கள் காயமடைந்தனர் என்று உள்துறை அமைச்சர் கா.சண்முகம் திங்கட்கிழமை (பிப்ரவரி 14) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஊழியர் தங்குவிடுதிகளில் நிகழும் கைகலப்புகள் பற்றியும் அவற்றைச் சமாளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றியும் வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி உறுப்பினர் ஃபூ மீ ஹார் எழுப்பிய கேள்விக்கு திரு சண்முகம் எழுத்துபூர்வமாகப் பதிலளித்தார்.
தங்குவிடுதியின் இடர்காப்பு, பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பில் அதன் நடத்துநர்களுடன் காவல்துறை அணுக்கமாகப் பணியாற்றி வருகிறது என்று குறிப்பிட்ட அமைச்சர், மனிதவள அமைச்சின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான உரிம நிபந்தனைகளின்படி தங்குவிடுதி நடத்துநர்கள் நுழைவுக் கட்டுப்பாடு, கண்காணிப்புக் கருவிகள், பாதுகாப்பு அதிகாரிகள் போன்றவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.
தங்குவிடுதியில் உதவி தேவை என அழைப்பு வந்து அங்கு செல்லும் காவல்துறையினர் அங்குள்ள நிலவரத்தை மதிப்பிட்டு, தகுந்த நடவடிக்கையை எடுப்பார்கள் என்றும் அவர் கூறினார்.