சிங்கப்பூருக்கும் இந்தோனீசியாவுக்கும் இடையே கையெழுத்தான ஆகாயவெளி உடன்பாடு இரு நாடுகளுக்கிடையே நிலவும் வலுவான நீண்டகால உறவில் மற்றொரு மைல்கல் என்று போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் வர்ணித்துள்ளார்.
அது இருநாட்டு விமானப் போக்குவரத்துக்கு மட்டுமல்லாமல், அனைத்துலக சிவில் விமானப் போக்குவரத்து சமூகத்துக்கும் நன்மை பயக்கும் ஓர் உடன்பாடாக விளங்கும் என்றும் அவர் நேற்று நாடாளுமன்றத்தில் அமைச்சர்நிலை அறிக்கையில் கூறினார்.
விமானத் தகவல் வட்டாரம் குறித்து உறுப்பினர்கள் சிலர் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்நிலை அறிக்கை மூலம் பதிலளித்தார் திரு ஈஸ்வரன்.
மாற்றியமைக்கப்பட்ட தனது விமானத் தகவல் வட்டாரத்தின் மூலம் அடுத்த 25 ஆண்டுகளுக்கு சிங்கப்பூர் அதன் ஆகாயப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்திக்கொள்ள இந்தோனீசியா அனுமதி அளிக்கும்.
இந்த சலுகைகள், சாங்கி விமான நிலையத்தின் தற்போதைய மற்றும் எதிர்காலத் தேவைகளுக்கு போதுமானதாக இருக்கும். அத்துடன் அது ஆகாயப் போக்குவரத்து மையம் என்ற சிங்கப்பூரின் நிலைப்பாட்டுக்கும் ஆகாயப் போக்குவரத்துத் துறையின் போட்டித்தன்மைக்கும் வலு சேர்க்கும் என்றார் அமைச்சர்.
சாங்கி விமான நிலையத்துக்கு அருகில் உள்ள பாத்தாம், பிந்தான், தஞ்சோங் பினாங் உட்பட இந்தோனீசிய விமான நிலையங்களின் பாதுகாப்பான நிர்வாகத்துக்கும் இந்த உடன்பாடு வகை செய்யும் என்றும் அவர் விவரித்தார்.
அடுத்து விமானத் தகவல் வட்டார உடன்பாட்டுக்கு அனைத்துலக சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் ஒப்புதலைப் பெற வேண்டும். ஒப்புதலைப் பெற்றதும், இந்தோனீசியாவும் சிங்கப்பூரும் விமானத் தகவல் வட்டார உடன்பாட்டை நடைமுறைப்படுத்தும் ஏற்பாடுகள் செய்யப்படும். பின்னர் மூன்று உடன்பாடுகளும் நடப்புக்கு வரும் என்றார் அமைச்சர்.

