நோவாவேக்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ள கொவிட்-19 தடுப்பூசியை 18 மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதுடையோருக்குப் போட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 தடுப்பூசி நிபுணர் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட, 'எம்ஆர்என்ஏ ' வகையைச் சேராத முதல் கூடுதல் (பூஸ்டர்) தடுப்பூசி இதுதான். 'நுவேக்சோவிட்' எனும் பெயரைக் கொண்ட அத்தடுப்பூசிக்கு கிருமிப்பரவல் காலகட்டத்திற்கான சிறப்பு நடைமுறையின்கீழ் இம்மாதம் 3ஆம் தேதி சுகாதார அறிவியல் ஆணையம் இடைக்கால அங்கீகாரம் வழங்கியது.
இத்தடுப்பூசியை மூன்று வார இடைவெளிவிட்டு இருமுறை போட்டுக்கொள்ள வேண்டும்.
இன்னும் சில மாதங்களில் நுவேக்சோவிட் தடுப்பூசியின் முதல் தொகுதி சிங்கப்பூருக்கு வந்துசேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
18 மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதுடையோருக்கான கூடுதல் தடுப்பூசியைப் பொறுத்தமட்டில், 'எம்ஆர்என்ஏ' தடுப்பூசிகளுக்குப் பதிலாக ஏற்றுக்கொள்ளத்தக்க மாற்றாக நுவேக்சோவிட் தடுப்பூசி இருக்கும் என்று நிபுணர் குழு குறிப்பிட்டது.
நுவேக்சோவிட் தடுப்பூசியின் தரம், பாதுகாப்பு, செயல்திறன் குறித்து மறுஆய்வு செய்ததாகவும், சிங்கப்பூர் மக்களுக்கு அதனால் கிடைக்கும் பலன்கள், அதனால் ஏற்படும் அபாயத்தைக் காட்டிலும் அதிகம் என்றும் சுகாதார அறிவியல் ஆணையம் தெரிவித்தது. நுவேக்சோவிட் தடுப்பூசி அறிகுறியுடன் கூடிய கொரோனா தொற்றுக்கு எதிராக கிட்டத்தட்ட 90% செயல்திறனைக் கொண்டிருப்பதாகவும் அது கடுமையான தொற்று ஏற்படாமல் 100% தடுப்பதாகவும் ஆய்வு முடிவுகள் காட்டின.
ஆல்ஃபா வகை கொவிட்-19 கிருமிக்கு எதிரான இத்தடுப்பூசியின் செயல்திறன் சீராக இருந்ததாக ஆணையம் கூறியது.

