சிங்கப்பூரில் உள்ள எல்லா ஃபேர்பிரைஸ் பேரங்காடிகளிலும் மாபெரும் அங்காடிகளிலும் ஒவ்வொரு
வெள்ளிக்கிழமையும் அரிசி, எண்ணெய், காய்கறிகள் உள்ளிட்ட 100 விதமான பொருள்களை பொதுமக்கள் 5 விழுக்காடு கழிவு விலையில் வாங்கலாம்.
மார்ச் 4ஆம் தேதி முதல் அவர்கள் இந்தச் சலுகையை அனு
பவிக்கலாம். ஃபேர்பிரைஸ் குழுமத்தின் 'ஸ்ட்ரெச் யுவர் டாலர்' என்னும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த விலைக்கழிவு வழங்கப்படுகிறது.
கொவிட்-19 கொள்ளைநோய், அதிகரிக்கும் எண்ணெய் விலை போன்ற பணவீக்கக் காரணிகள் ஆகியவற்றால் உயரும் வாழ்க்கைச் செலவினத்தைச் சமாளிப்பதில் பயனீட்டாளர்களுக்கு உதவும் நோக்கம் கொண்டது இத்திட்டம்.
அத்துடன், நேற்று (பிப்ரவரி 14) முதல் சிங்கப்பூரில் உள்ள 80க்கும் மேற்பட்ட கோப்பித்தியாம் மற்றும் என்டியுசி ஃபுட்ஃபேர் உணவகங்களில் சில வகை காப்பி மற்றும் தேநீர் விலைகளை 90 காசாகக் குறைத்துள்ளது இந்த உதவித் திட்டம்.
ஆண்டிறுதி வரை இந்த குறைக்கப்பட்ட, அல்லது உயர்த்தப்படாத விலை நீடிக்கும்.
மேலும் இவ்விரு உணவக நிறுவனங்களும் இதர வகையான காப்பிக்கும் தேநீருக்கும் சில சிற்றுண்டிக்கும் ஆண்டிறுதி வரை விலையை உயர்த்துவதில்லை என உறுதிபூண்டுள்ளன.
இந்தச் சலுகைகள் தவிர தேவையுள்ளோரு க்கும் மூத்தோருக்கும் தொழிற்சங்க உறுப்பினர்களுக்கும் மலிவு விலையில் உணவு வழங்கும் 'ரைஸ் கார்டன்' திட்டம் இந்த ஆண்டின் இறுதிக்குள் 40 கடைகளுக்கு விரிவுபடுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
தற்போது 19 கடைகளில் நடப்பில் இருக்கும் 'ரைஸ் கார்டன்' திட்டம் காம்கேர் அட்டைதாரர்களுக்கு $1.80 என்னும் சலுகை விலையில் உணவு வழங்குகிறது. ஓர் இறைச்சியுடன் இரு வகையான காய்கறிகள் அந்த உணவில் இருக்கும்.
'ஸ்ட்ரெச் யுவர் டாலர்' திட்டம் 2007ஆம் ஆண்டுக்கும் 2008ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் நிதி நெருக்கடி நிலவியபோது அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர், 2010, 2011ஆம் ஆண்டுகளில் பொருளியல் மந்தம் ஏற்பட்டதால் மீண்டும் இத்திட்டம் நடப்புக்குக் கொண்டுவரப்பட்டது.
சலுகைகளை விளக்கிய ஃபேர்பிரைஸ் குழுமத்தின் தலைமை நிர்வாகி சியா கியன் பெங், அதிகரித்துள்ள விலை நெருக்கடி மற்றும் இடையூறுக்கு ஆளாகியுள்ள விநியோகத் தொடர் ஆகியவற்றுக்கு இடையில் வாழ்க்கைச் செலவினத்தை மிதமான அளவில் வைத்திருப்பதை குழுமம் நோக்கமாகக் கொண்டிருக்க்கிறது என்றார்.
ஏற்கெனவே நடப்பில் இருக்கும் முன்னோடித் தலைமுறையினர் மற்றும் மெர்டேக்கா தலைமுறையினர், மூத்த குடிமக்கள் சமூக சுகாதார உதவித் திட்டத்தின் நீலநிற அட்டைதாரர்கள் ஆகியோருக்கு திங்கள் முதல் வியாழன் வரை வழங்கப்பட்டு வரும் சலுகையும் தொடரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள வெள்ளிக்கிழமை சலுகை உட்பட எல்லா வகையான விலைக்கழிவு திட்டங்களின் மூலமும் பொதுமக்கள் $12 மில்லியன் வரை இந்த ஆண்டில் மிச்சப்படுத்த முடியும் என கணக்கிடப்பட்டு உள்ளது.
அரிசி, காய்கறி உட்பட 100 பொருள்களை மார்ச் 4 முதல் 5% தள்ளுபடியில் வாங்கலாம்

