கொவிட்-19 கொள்ளைநோயால் பாதிக்கப்படுவோருக்கு உதவ 2020ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 'துணிகர நிதி'யைப் பெறு வதற்கான தகுதிவரம்பு நேற்று முதல் கடுமையாக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 மீட்சி தேசத்தை நோக்கிய நகர்வுக்கு ஏற்பவும் பெரிதும் தேவையுள்ளோருக்கு உதவி சென்றுசேருவதை உறுதிப்
படுத்தவும் இந்த மாற்றம் செய்யப்படுவதாக சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சும் சமூக சேவைக்கான தேசிய மன்றமும் நேற்று கூட்டாகத் தெரிவித்தன.
கடந்த 2003ஆம் ஆண்டு சிங்கப்பூரில் சார்ஸ் நோய் பரவியபோது இந்த நிதி முதன்முதலாக அறிமுகம் செய்யப்பட்டது.
சார்ஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கும் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்கும் உதவ அப்போது இந்நிதி அமல் செய்யப் பட்டது.
பின்னர், கொரோனா கிருமித்தொற்றுப் பரவலைச் சமாளிக்கப் பணிபுரிந்த போது பாதிக்கப்பட்ட சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்
களுக்காக இந்த நிதி 2020ஆம் ஆண்டு மீண்டும் தொடங்கப்பட்டது.
நேரடியாகப் பாதிக்கப்படாத ஊழியர்களுக்கும் இந்த நிதி உதவிக்கரம் நீட்டியது.
இவர்கள் தவிர, சேவையில் இருந்தபோது கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட முன்களப் பணியாளர்கள் மற்றும் சமூகத் தொண்டூழியர்களை உள்ளடக்கிய இதரக் குழுக்களுக்கும் தொற்றால் மாண்டோரைச் சேர்ந்தோருக்கும் நிதியின் உதவி நீண்டது.
நேற்று முதல் அறிமுகம் கண்ட புதிய மாற்றங்களின்படி, முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட, கொவிட்-19 பணியின்போது நோயாளிகளை நேரடியாகக் கையாளக்கூடிய ஊழியர்கள் மட்டுமே துணிகர நிதியைப் பெறுவதற்கான தகுதியைப் பெறு வர்.
கொவிட்-19 பணியின்போது கிருமித்தொற்றால் பாதிக்கப்படும் முன்களப் பணியாளர்கள் மற்றும் சமூகத் தொண்டூழியர்கள் இனி இதற்குத் தகுதிபெற மாட்டார்கள்.
பெரும்பாலான கொவிட்-19 தொற்று நோயாளிகள் எந்தவித மான அறிகுறி இன்றியும் இலேசான அறிகுறிகளுடனும் வந்து சேருவதால் இந்த மாற்றம் கொண்டு வரப்படுவதாக கூட்டறிக்கை குறிப்பிட்டது.

