தொடக்கநிலை மூன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான சாலைப் பாதுகாப்புத் திட்டத்தை வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து போக்குவரத்துக் காவல்துறையினர் அறிமுகப்படுத்த இருக்கின்றனர்.
சாலைப் பகுதியை மேம்படுத்த போக்குவரத்துக் காவல்துறையின் மும்முனை அணுகுமுறையின் ஒரு பகுதியாக இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
மாணவர்களிடையே சாலைப் பாதுகாப்பை மேம்படுத்த கல்வி அமைச்சுடன் போக்குவரத்து காவல்துறை இணைந்து செயல்படுகிறது.
இதுதொடர்பாக மாணவர்களுக்கான இணையம் வழி நடத்தப்படும் திட்டத்தின் கேலிச்சித்திரம், புதிர்ப் போட்டிகள் ஆகியவை மூலம் சாலைப் பாதுகாப்பு பற்றி மாணவர்களுக்குக் கற்பிக்கப்படும்.
இந்தத் திட்டத்துக்கு 'சாலைப் பாதுகாப்புச் சவால்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் நான்கு நிலைகள் உள்ளன.
அவற்றை நிறைவு செய்யும் மாணவர்களுக்கு ஜூனியர் சாலைப் பாதுகாப்பு தூதர் பட்டம் அளிக்கப்படும்.
"தங்களையும் தங்கள் அன்புக்குரியவர்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக மாணவர்களும் ஜூனியர் சாலைப் போக்குவரத்துத் தூதர்களும் சாலைப் பாதுகாப்பு பழக்கங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்று போக்குவரத்துக் காவல்துறை விரும்புகிறது," என்று காவல்துறை தெரிவித்தது.
இத்திட்டத்தில் பங்கெடுக்க விரும்புவோர் ஏப்ரல் மாதம் முதல் சிங்கப்பூர் காவல்துறையின் இணையப்பக்கம் மூலம் பங்கேற்கலாம்.
கல்வி, பங்கேற்பு, அமலாக்கம் ஆகியவை போக்குவரத்து காவல்துறையின் மும்முனை அணுகுமுறையின் வெவ்வேறு பிரிவுகளாகும்.
பங்கேற்பு அணுகுமுறையின்கீழ் போக்குவரத்துக் காவல்துறை கடந்த ஆண்டு மோட்டார் சைக்கிளோட்டிகள், முதிய பாதசாரிகள், சிறுவர்கள், புதிய ஓட்டுநர்கள் ஆகியோருக்குப் பல திட்டங்களை நடத்தியது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் மூத்தோருக்கான சாலைப் பாதுகாப்புத் திட்டம் நடத்தப்பட்டது. அதன்கீழ் மூத்தோர் நடவடிக்கை நிலையங்களில் சிறப்புரைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நல்ல சாலைப் பாதுகாப்பு பழக்க வழக்கங்களைப் பற்றியும் கண் பராமரிப்பு பற்றியும் மூத்தோருக்கு நினைவுபடுத்த இவை நடத்தப்பட்டன.
நிலப் போக்குவரத்து ஆணையத்தின் மின் தகவல்பலகைகளிலும் சாலைப் பாதுகாப்பு தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டன.
சாலை விதிமுறைகளை மீறும் ஓட்டுநர்களைப் பிடிக்க மற்ற அரசு அமைப்புகளுடன் இணைந்து கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக போக்குவரத்து காவல்துறை கூறியது.
"சாலைப் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பாகும்.
"தொடர்ந்து நல்ல சாலைப் பாதுகாப்பு பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிக்கும்படி சாலைகளைப் பயன்படுத்தும் அனைவரிடமும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
"சிங்கப்பூரின் சாலைகள் பாதுகாப்பானவையாகத் திகழ அனை
வரும் பங்களிக்க வேண்டும்," என்று போக்குவரத்து காவல்துறை கூறி உள்ளது.