ஜப்பானியர் ஆக்கிரமிப்பை நினைவுகூரும் கலைப்பொருள்கள்
இரண்டாம் உலகப் போரின்போது பிரிட்டிஷ் படையினரும் ஜப்பானியப் படையினரும் எதிரும் புதிருமாக இருந்தாலும் அவ்விரு நாடுகளுக்கு இடையிலான உறவில் கசப்பு இல்லை. குறிப்பாக, 1900களில் இரு நாடுகளின் தோழமைக்கு ஆதாரமாக ஜப்பானியரின் கிண்ணம் ஒன்று சான்றாக விளங்குகிறது. 1942 பிப்ரவரி 15ஆம் தேதி ஜப்பானியரின் கட்டுப்பாட்டில் சிங்கப்பூர் வந்ததைக் குறிக்கும் 80வது ஆண்டு நிறைவை ஒட்டி இன்று தொடங்கும் புதிய கண்காட்சி ஒன்றில் இந்தக் கிண்ணம் முதன்முதலாகப் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது. இதேபோல, இதற்குமுன் பார்த்திராத 150 விதமான கலைப்பொருள்களும் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன. 'பழைய கதையில் புதிய வெளிச்சம்' என்ற பொருளில் நடத்தப்படும் கண்காட்சிக்காக இந்த அரிய பொருள்களை திரு டேவ் கான், திருவாட்டி செங் லாய் யீ மற்றும் திரு சிங் சியாக் கெங் ஆகியோர் சேகரித்துத் தந்துள்ளனர். ஃபோர்ட் கேனிங் பார்க்கிற்கு அடுத்து உள்ள சிங்கப்பூர் தேசிய ஆவணக் காப்பகத்தில் இவை காட்சிக்கு வைக்கப்படும். ஜூன் மாதம் வரை இவற்றைக் கண்காட்சியில் காணலாம்.
ஆகப்பெரிய முதலீட்டு மோசடி: புதிதாக 18 குற்றச்சாட்டுகள்
நிக்கல் எனப்படும் வன்வெள்ளி வர்த்தகத்துடன் தொடர்புடைய சிங்கப்பூரின் ஆகப்பெரிய முதலீட்டு மோசடி ஒன்றில் சம்பந்தப்பட்ட வர்த்தகர் ஒருவர் மீது நேற்று 18 புதிய குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் சுமத்தப்பட்டன.
இங் யு ஸி எனப்படும் அவர் என்வி குளோபல் டிரேடிங் மற்றும் என்வி அசெட் மேனேஜ்மண்ட் நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார். சட்டவிரோதமாகப் பெற்ற பணத்தை மற்றவர்களுக்கு அனுப்புவது தொடர்பான பல்வேறு குற்றங்கள் தொடர்பில் லஞ்ச ஊழல் தடுப்புச் சட்டம், போதைப்பொருள் கடத்தல் முறியடிப்புச் சட்டம் மற்றும் இதர கடினமாக குற்றங்களுக்கான சட்டத்தின்கீழ் எட்டு குற்றச்சாட்டுகளை அவர் எதிர்நோக்குகிறார்.
2020 ஜூன் மாதத்திற்கும் 2021 பிப்ரவரி மாதத்திற்கும் இடையில் $35 மில்லியனுக்கும் மேற்பட்ட பணத்தை இங் மாற்றியதாகக் கூறப்படுகிறது. ஹெச்எஸ்பிசி வங்கியின் இரண்டு கணக்குகள் மூலம் பல்வேறு நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் தனிப்பட்டவர்களின் செலவுகளுக்காக அவர் இந்தத் தொகையை அனுப்பினாராம். $12 மில்லியனுக்கும் மேற்பட்ட அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கடன்பற்று அட்டை கட்டணத்தைச் செலுத்தவும் ஆடம்பர நகைகளை வாங்கவும் இத்தொகை அனுப்பப்பட்டதாகக் கூறப்பட்டது.
அதிகாரிக்கு லஞ்சம்: சிறை
பொதுப் பயனீட்டுக் கழக அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்த குற்றத்திற்காக 'பைப் ஒர்க்ஸ்' என்னும் துணைக் குத்தகை நிறுவனத்தைச் சேர்ந்த திட்ட மேலாளர் ஒருவருக்கு நேற்று ஏழு மாதம். இரண்டு வாரம் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டது. கணேசன் சுப்பையா, 52, (படம்) எனப்படும் அவர், கழகத்தின் குத்தகைப் பணிகளை தமது நிறுவனம் பெறுவதற்கு உதவ பல்வேறு சந்தர்ப்பங்களில் அதி காரிக்கு $45,169 லஞ்சம் கொடுத்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. லஞ்சம் பெற்ற அதிகாரி ஜமாலுதீன் முகமது கடந்த நவம்பர் மாதம் தண்டிக்கப்பட்டார்.

