அடுத்த ஆண்டு முதல் சிங்கப்பூருக்குள் வரும் அனைத்து பயணிகளும் தானியக்க முறையில் தங்கள் குடிநுழைவுச் சோதனையை மேற்கொள்வது வழக்கமாகிவிடும் என்று ஐசிஏ எனும் சிங்கப்பூர் குடிநுழைவுச் சோதனைச் சாவடிகள் ஆணையம் இன்று (பிப்ரவரி 15) தெரிவித்துள்ளது.
வெளிநாட்டுப் பயணிகள் இனிமேல் சிங்கப்பூருக்கு வரும்போது தங்கள் கருவிழி, முக அடையாளங்களை ஆளில்லா தானியக்க வருடிகளில்(ஸ்கேனர்) பதிவு செய்துகொள்ளலாம்.
சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள், நீண்டகால அனுமதி அட்டை வைத்திருப்போர் பயன்படுத்தும் அதே தானியக்க வரிசைகளை அனைத்து பயணிகளும் பயன்படுத்தலாம்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் மின்னியல் குடிநுழைவு அட்டையை (visit pass) சாங்கி விமான நிலையத்தில் அனைத்து வெளிநாட்டுப் பயணிகளுக்கும் வழங்கும் முறை அறிமுகமானது. இனி இம்முறை அனைத்து குடிநுழைவுச் சோதனைச் சாவடிகளிலும் அமலாக்கப்படும். காகிதத்தில் தரப்பட்டு வந்த குடிநுழைவு அட்டைக்குப் பதில் இந்த மின்னியல் ‘விசிட் பாஸ்’ வழங்கப்படும்.
புதிய மாற்றத்தால் அதிகாரிகளும் பயணிகளும் தொடர்பு கொள்ளும் நேரம் வெகுவாகக் குறையும் என்று ஆணையம் கூறியது.