சிங்கப்பூர்க் குடும்பங்களின் ஒட்டுமொத்த சராசரி குடும்ப வருமானம் சென்றாண்டு 3.6 விழுக்காடு ஏற்றம் கண்டது.
அது $9,189லிருந்து $9,520க்கு உயர்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
பணவீக்கத்தைக் கருத்தில் கொண்ட பிறகு, இந்த ஏற்றம் 1.5 விழுக்காடாகப் பதிவானதாக புள்ளிவிவரத் துறை இன்று (பிப்ரவரி 15) வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
கொவிட்-19 தொற்று ஏற்படுவதற்கு முன், அதாவது 2019ஆம் ஆண்டைக் காட்டிலும் சென்றாண்டு பதிவான சராசரி குடும்ப வருமானம் கூடுதலாக இருந்தது.
2019ஆம் ஆண்டு இந்தத் தொகை $9,425ஆக இருந்தது. 2020ஆம் ஆண்டு வருமானம் $9,189க்குச் சரிந்தது.
நாட்டின் பொருளியல் மீட்சியடைந்து வரும் நிலையில், குடும்ப வருமானங்களும் உயர்ந்துவருவதாகப் புள்ளிவிவரத் துறை கூறியது.
அதோடு, ஒவ்வொரு குடும்ப உறுப்பினரின் சராசரி மாதாந்திர வருமானம் கடந்த ஆண்டு $3,027ஆக உயர்ந்தது. ஒப்புநோக்க, 2020ஆம் ஆண்டில் இந்தத் தொகை $2,886ஆக இருந்தது.
இதற்கிடைய, கொவிட்-19 நெருக்கடிநிலையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசாங்கம் ஆதரவு திட்டங்கள் வழங்கி வருகிறது.
குறிப்பாக ஓரரை, ஈரறை வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் வசிக்கும் குடும்பங்களுக்குக் கூடுதல் ஆதரவு வழங்கப்பட்டதாக புள்ளிவிவரத்துறையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

