சிங்கப்பூரில் 'எம்ஆர்என்ஏ' அல்லாத கொவிட்-19 தடுப்பூசிகளான 'சைனோஃபார்ம்' மற்றும் 'சைனோவேக்-கொரோனாவேக்' போன்றவற்றைச் செலுத்திக்கொண்ட சுமார் ஆயிரம் பேர் முழுமையாகத் தடுப்பூசி செலுத்தப்பட்டவர் என்ற தர
நிலையை இழந்திருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை அவர்கள் அந்தத் தகுதிநிலையை இழந்திருப்பர் என்று கருதுவதாகச் சுகாதார மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி கூறினார்.
பிப்ரவரி 9ஆம் தேதி, அத்தகைய 'எம்ஆர்என்ஏ' அல்லாத கொவிட்-19 தடுப்பூசிகளைச் செலுத்திக்கொண்ட சுமார் ஆயிரம் பேரின் தரநிலை பிப்ரவரி 14ஆம் தேதி காலாவதியாகும் என்று தெரியவந்ததாக அவர் சொன்னார்.
கொவிட்-19க்கு எதிரான பாதுகாப்பைத் தொடர்ந்து பெறுவதற்கு, கூடுதல் தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படி பொதுமக்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். பிப்ரவரி 14ஆம் தேதி, 18 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள், முன்னைய தடுப்பூசி போட்டுக்கொண்ட 270 நாள்களுக்குள் கூடுதல் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். முழுமையாகத் தடுப்பூசி செலுத்தப்பட்டவர் என்ற தரநிலையைத் தக்கவைத்துக்கொள்ள அது
அவசியம்.
அவ்வாறு செய்யத் தவறியவர்கள், உணவகங்களில் அமர்ந்து உண்ண இயலாது; திரையரங்குகள், கடைத் தொகுதிகள், நூலகங்கள் ஆகியவற்றுக்குச் செல்ல இயலாது. தடுப்பூசி அடைப்படையிலான பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகளின்கீழ் அவர்களுக்கு அதற்கான அனுமதி இல்லை.
'சைனோஃபார்ம்' மற்றும் 'சைனோவேக்-கொரோனாவேக்' தடுப்பூசிகளை மூன்று முறை செலுத்திக்கொள்ள வேண்டும். மூன்றாவது ஊசி செலுத்தியதில் இருந்து 3 மாதங்கள் கழித்துக் கூடுதல் தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர் என்ற தர
நிலையைத் தக்கவைத்துக்கொள்ளலாம் என்பதைச் சுகாதார அமைச்சு முன்னரே தெளிவுபடுத்தியிருந்தது.
'ஃபைசர்', 'மொடர்னா' தடுப்
பூசிகளை இரண்டு முறை போட்டுக்கொண்டோர், இரண்டாவது ஊசி போட்ட 5 மாதங்களுக்குப் பிறகு கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
'எம்ஆர்என்ஏ' அல்லாத கொவிட்-19 தடுப்பூசிகள் குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்து டாக்டர் ஜனில் நாடாளுமன்றத்தில் பேசினார். அவற்றை 12 முதல் 17 வயதினருக்குப் பயன்படுத்துவது குறித்துக் கேட்கப்பட்டது. அது ஆய்வுத் திட்டத்தில் பங்கேற்பவருக்கு மட்டுமே இயலும் என்று கூறிய டாக்டர் ஜனில், உலகச் சுகாதார நிறுவனம் 18 வயதுக்குக் கீழானோருக்கு இன்னும் அவற்றைப் பரிந்துரைக்கவில்லை என்பதைச் சுட்டினார். தடுப்பு மருந்தைத் தயாரித்த நிறுவனமும் அவ்வாறு சிங்கப்பூரிடம் அனுமதி கேட்கவில்லை என்பதையும் அவர் எடுத்துரைத்தார். எனவே மருத்துவ ரீதியாக 'எம்ஆர்என்ஏ' தடுப் பூசிக்குத் தகுதிபெறுவோர் அவற்றைச் போட்டுக்கொள்ளும்படி டாக்டர் ஜனில் வலியுறுத்தினார்.

