சிங்கப்பூருக்கு வரும் அனைத்துப் பயணிகளும், அடுத்த ஆண்டிலிருந்து தானியக்கக் குடிநுழைவு நடைமுறைக்கான தடங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று குடிநுழைவுச் சோதனைச் சாவடி ஆணையம் தெரிவித்துள்ளது.
தற்போதைய நடைமுறையின் கீழ், வெளிநாட்டுப் பயணிகள் சிங்கப்பூருக்கு வரும்போது, ஆணையத்தின் அதிகாரிகள் பணியாற்றும் முகப்புகளுக்குச் செல்லவேண்டும். அவர்களது விழித்திரை, முக அடையாளங்களின் அடிப்படையில் குடிநுழைவு அனுமதி வழங்கப்படுகிறது.
இனி அவர்களும், சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் நீண்டகால அனுமதி அட்டை வைத்திருப்போரும் பயன்படுத்தக்கூடிய தானியக்கத் தடங்களைப் பயன்படுத்தலாம். ஆணையம் நேற்று வெளியிட்ட அதன் வருடாந்திரப் புள்ளியியல் அறிக்கையில் இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.
சென்ற ஆண்டு அக்டோபரில், சாங்கி விமான நிலையத்தில் மின்வருகை அட்டையை ஆணையம் அறிமுகப்படுத்தியது.
விரைவில் அது அனைத்து சோதனைச் சாவடிகளிலும் நடப்புக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது.
அந்த நடைமுறையின்கீழ், வெளிநாட்டுப் பயணிகளின் கடப்பிதழ்களில் இனி அனுமதி முத்திரை பதியப்படமாட்டாது. இவை, ஆணையத்தின் அதிகாரிகளுக்கும், பயணிகளுக்கும் இடையிலான தொடர்பைக் குறைக்கும் நடவடிக்கைகள் என்று ஆணையம் கூறியது.
சரக்கு விநியோகத்தைப் பாதுகாப்பான முறையில் செயல்படுத்த, அதனை மின்னிலக்க மற்றும் தானியக்கப்படுத்துவதற்கான முயற்சிகளையும் ஆணையம் எடுத்துள்ளது. அனைத்துலகத் துறைமுகம் என்ற சிங்கப்பூரின் தரநிலையைக் கட்டிக்காப்பதும் அதன் இலக்கு.
துவாஸ் துறைமுகத்தில், கப்பல் நகரும்போதே சரக்கை அதிலிருந்து மாற்றுவதற்கான 'ஆன்-த-ஃப்ளை' முறை சென்ற அக்டோபரில் நடப்புக்கு வந்தது. சரக்குகளின் மின்வருடிப் படங்களைக் கொண்ட ஆவணங்களை முன்னரே சமர்ப்பிக்கவேண்டும்.
ஆணையத்தின் அதிகாரிகள் அவற்றைச் சரிபார்த்த பின்னர் தானியக்க முறையில் அவை அனுமதிக்கப்படும்.
இரண்டாம் கட்டச் சோதனைக்கும் நடமாடும் தொழில்நுட்பக் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.
அந்த நடைமுறை நேரத்தை மிச்சப்படுத்த உதவுவதாக ஆணையம் சொன்னது.