சிங்கப்பூரில் குடும்பங்களின் சராசரி வருமானம் சென்ற ஆண்டு அதிகரித்துள்ளது. கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவலிலிருந்து சிங்கப்பூரின் பொருளியல் மீண்டு வருவதைச் சித்திரிக்கும் வண்ணம் இந்தப் புள்ளி விவரங்கள் அமைந்துள்ளதாக சிங்கப்பூர் புள்ளி விவரத் துறை தெரிவித்துள்ளது.
2020ஆம் ஆண்டு குடும்பங்களின் சராசரி வருமானம் 10 ஆண்டுகளில் முதன்முறையாக விழுந்ததாகப் புள்ளி விவரத் துறை கூறியது.
2020ஆம் ஆண்டு வேலையின் மூலம் வரும் குடும்பங்களின் சராசரி வருமானம் 9,189 வெள்ளியாகப் பதிவானது. சென்ற ஆண்டு இந்தத் தொகை 3.6 விழுக்காடு அதிகரித்து 9,520 வெள்ளிக்குக் கூடியது. இது, கொள்ளைநோய்ப் பரவலுக்கு முந்தைய காலத்தில் பதிவானதைவிட அதிகம். மத்திய சேமநிதிச் சந்தாவில் போடப்படும் தொகையும் ஒரு குடும்பத்தின் வருமானத்தைக் கணக்கிடும்போது கருத்தில்கொள்ளப்படும்.
கிட்டத்தட்ட அனைத்துப் பிரிவுகளிலும் சராசரி குடும்ப வருமானம் அதிகரித்தது. ஆக அதிகம் சம்பாதிப்போரிடையே குடும்ப வருமானம் 1.1 விழுக்காடு குறைந்தது.

