சிங்கப்பூரில் கொவிட்-19க்கு எதிரான இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசிக்கான திட்டம் எதுவும் இப்போதைக்கு இல்லை என்று சுகாதார அமைச்சின் மருத்துவ சேவைகள் துறை இயக்குநர் கென்னத் மாக் கூறியுள்ளார்.
கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசியால் ஏற்படக்கூடிய பாதுகாப்பு தொடர்பான ஆதாரங்களை அதிகாரிகள் ஆராய்ந்துள்ளனர்.
அதோடு, தடுப்பூசி போட்டுக்கொண்டோரிடம் தொற்று எந்த அளவுக்கு இருக்கிறது என்பதையும் அவர்கள் ஆராய்ந்துள்ளனர்.
இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசி தேவையா, அப்படி தேவை எனில் அது எப்போது தேவைப்படும் என்பது பற்றி இப்போது முடிவு செய்வது சரியானதாக இருக்காது என்று அவர் புதன்கிழமை (பிப்ரவரி 16) நடந்த செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசி தேவை என்ற எண்ணம் இப்போது இல்லை என்றார் அவர்.
கூடுதல் தடுப்பூசியைப் (பூஸ்டர்) போட்டுக்கொள்ளும்படி இப்போது மேலும் பலருக்கும் ஊக்கமூட்டப்பட்டு வருகிறது.
இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசி தேவையா என்பது பற்றி அதற்குள்ளாக முடிவு செய்ய முடியாது என அவர் கூறினார்.
இதனிடையே, இரண்டாவது, மூன்றாவது கூடுதல் தடுப்பூசி தேவையா என்பது பற்றி அறிவியல் அறிஞர்கள் இன்னமும் விவாதித்து வருகிறார்கள் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் கூறினார்.
வருங்காலத்தில் ஏற்படக்கூடிய உருமாறிய கிருமிகள் ஓமிக்ரான் போலவே இருந்தால் அதற்காகவே சிறப்பான தடுப்பூசியை உருவாக்க வேண்டிய தேவை இல்லாமல் போகலாம் என்றார் அவர்.
டெல்டாவை போன்ற கிருமிகள் உருமாறி தலையெடுக்கும் பட்சத்தில் அந்தத் தொற்றுக்கு எதிராக நம்மை பாதுகாத்துக்கொள்ள சிறப்பு அம்சங்கள் வாய்ந்த தடுப்பூசியை உருவாக்குவது பற்றி பரிசீலிக்க வேண்டி இருக்கலாம் என்று இணைப் பேராசிரியரான கென்னத் மாக் தெரிவித்தார்.