கொவிட்-19 தொற்றியவர்களில் மேலும் பலரை நேற்று முதல் ஆரம்ப பராமரிப்பு மருத்துவர்களே கையாள முடியும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்து உள்ளது.
குறிப்பாக, வேறு எந்த நோய்களும் இல்லாமல் இலேசான சுவாசப் பிரச்சினைகளை மட்டும் எதிர்நோக்கும்பட்சத்தில் இந்த ஏற்பாடு, தடுப்பூசி நிலவரம் எப்படி இருந்தாலும் 3 முதல் 69 வரை வயதுள்ளவர்களுக்குப் பொருந்தும்.
முற்றிலும் தடுப்பூசி போட்டுக்கொண்ட 70 முதல் 79 வரை வயதுள்ள நோயாளிகளுக்கும் இது பொருந்தும். இவர்கள் மருத்துவ மனைக்குச் செல்லவேண்டிய தேவை இல்லை.
இந்த வயதுப் பிரிவினர் அல்லாத மற்ற நோயாளிகளை வீட்டில் இருந்து குணமடையும் திட்டம் அல்லது கொவிட்-19 சிகிச்சை நிலையம் அல்லது மருத்துவமனையில் சிகிச்சை மூலமாக தொடர்ந்து சுகா தார அமைச்சே கையாளும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது.
எடுத்துக்காட்டாக, முற்றிலும் தடுப்பூசி போட்டுக்கொண்ட 80 வயதும் அதற்கு அதிக வயதும் உள்ள முதியவர்கள், 70 வயது முதல் 79 வயது வரைப்பட்ட தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் வீட்டிலேயே குணமடையும் செயல்திட்டத்தின்கீழ் வைக்கப்படுவர்.
அவர்களுக்குத் தொலைதூர சிகிச்சை வழங்கப்படும். முற்றிலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 80 வயதும் அதற்கு அதிக வயதும் உள்ளவர்களுக்குப் பராமரிப்பு நிலையங்களில் சிகிச்சை அளிக்கப்படும்.
"ஓமிக்ரான் தொற்றிய நோயாளிகளின் நிலவரம் பற்றி மறுபரிசீலனை செய்து இருக்கிறோம். பெரும்பாலானவர்களுக்கு இலேசான அறிகுறிதான் உள்ளது. அல்லது அறவே அறிகுறி இல்லை.
"அவர்கள் சொந்தமாகவே குணமடைந்துவிடலாம்," என செய்தியாளர் கூட்டத்தில் மருத்துவச் சேவைகள் துறை இயக்குநர் கென்னத் மாக் தெரிவித்தார்.
இதனிடையே, ஓமிக்ரான் தொற்று உறுதியானவர்களுடன் அணுக்கத் தொடர்பில் இருந்தவர்களுக்கு நாளை முதல் சுகாதார ஆபத்து எச்சரிக்கை அனுப்பப்படாது. அவர்கள் தங்களைத் தாங்களே சுயமாக கண்காணித்துக்கொள்ளவேண்டிய கால அளவும் ஏழு நாள்களில் இருந்து ஐந்து நாள்களாக குறைக்கப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.
ஆகையால், சுகாதார ஆபத்து எச்சரிக்கைக்குப் பதிலாக சுகாதார ஆபத்து அறிவிப்பு கடிதம் அனுப்பப்படும். இது ஐந்து நாள்களுக்குச் செல்லுபடியாகும்.
இதனிடையே, ஓமிக்ரான் தொற்றியவர்கள் வேகமாக குணமடைந்து வருகிறார்கள் என்று நேற்று செய்தியாளர் கூட்டத்தில் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் கூறினார்.
ஓமிக்ரானின் சிறப்பு இயல்புகளை மனதில்கொண்டு அதற்கேற்ப சுகாதார நடைமுறைகளைத் திருத்தி அமைக்க வேண்டியுள்ளது என்ற அமைச்சர், இதனையொட் டியே சுகாதார ஆபத்து எச்சரிக்கைக்குப் பதிலாக சுகாதார ஆபத்து கடிதம் இடம்பெறுகிறது என்றார்.

