சிங்கப்பூரில் கூடுதல் (பூஸ்டர்) தடுப்பூசி போட்டுக்கொள்ளாததால் முழுமையான தடுப்பூசி போட்டுக்கொண்ட தகுதியை சுமார் 21,800 பேர் இழந்துவிட்டனர். அவர்கள் 18 வயதும் அதற்கு அதிக வயதும் உள்ளவர்கள்.
முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் என்னும் தகுதியை இழந்தவர்கள் உணவகங்களில் அமர்ந்து சாப்பிட முடியாது. கடைத்தொகுதிகளுக்குச் செல்ல முடியாது. இதர தடைகளும் உண்டு.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, தகுதிபெற்று இருந்தபோதிலும் அவர்கள் கூடுதல் தடுப்பூசிக்குப் பதிந்துகொள்ளவில்லை என்று சுகாதார அமைச்சு கூறியது. இரண்டாவது தடுப்பூசியைப் போட்ட பிறகு 270 நாள்களுக்குள் கூடுதல் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டிருக்க வேண்டும்.
இதனிடையே, பிப்ரவரி 11 முதல் 13 வரைப்பட்ட கடந்த வார இறுதியில் ஏறத்தாழ 82,000 பேர் கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொண்டதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இது, முந்திய வார இறுதியின் எண்ணிக்கையைக் காட்டிலும் குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகம் என்று அமைச்சு கூறியது. முந்திய வார இறுதியின்போது ஏறக்குறைய 63,000 பேர் கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
கூடுதல் தடுப்பூசி போட்டவர்களின் தடுப்பூசி தகுதிநிலை பற்றிய தகவல்கள் 24 மணி நேரத்திற்குள் பதிவு செய்யப்படும் என்று சுகாதார அமைச்சு கூறியது.
இதனிடையே, செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, மக்கள்தொகையில் சுமார் 94% முழுமையாக தடுப்பூசி போட்டிருந்தனர். 64% கூடுதல் தடுப்பூசி போட்டிருந்தனர்.

