சுகாதாரப் பராமரிப்பு, முதியோர் பராமரிப்பு, பாலர் பள்ளிகள் போன்ற எளிதில் பாதிக்கப்படக்கூடிய பிரிவினர் மட்டுமே நாளை முதல் தொடர்ந்து காலக்கிரம முறைப்படியான பரிசோதனை ஏற்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
கொவிட்-19 உருமாறிய கிருமியின் தனிப்பட்ட தன்மைகளுக்கு ஏற்ப நடப்பு விதிமுறைகளைத் திருத்தி அமைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த ஏற்பாடு நடப்புக்கு வருகிறது என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் நேற்று பல அமைச்சுகளை உள்ளடக்கிய சிறப்புப் பணிக்குழு மெய்நிகர் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
உணவகங்கள், உணவங்காடி நிலையங்கள் போன்ற உணவு, பானத் துறையில் வேலை பார்ப்பவர்கள், கடைத்தொகுதிகளில் வேலை பார்ப்பவர்கள், விமான நிலைய, துறைமுக எல்லைகளில் வேலை பார்ப்பவர்கள் ஆகியோர் இப்போது காலவரிசை முறைப்படி கொவிட்-19 பரிசோதனைக்கு உட்பட வேண்டும்.
பொதுவாக இவர்களுக்குத் தொற்று ஏற்படக்கூடிய ஆபத்து அதிகம் என்று கருதப்படுகிறது.
இருந்தாலும் நாளை முதல் இத்தகைய ஊழியர்கள் காலவரிசை முறையிலான பரிசோதனை ஏற்பாட்டில் இடம்பெற வேண்டிய தேவை இல்லை.

