கொவிட்-19 சூழலிலிருந்து சிங்கப்பூரின் பொருளியல் மீண்டு வந்ததைத் தொடர்ந்து சென்ற ஆண்டு கூடுதலான புதிய பல்கலைக்கழகப் பட்டதாரிகளுக்கு முழுநேர வேலை கிடைத்துள்ளது.
புதிய பட்டதாரிகளுக்காக நடத்தப்பட்ட கருத்தாய்வில் 84 விழுக்காடு புதிய பட்டதாரிகளுக்கு வேலை கிடைத்தது தெரியவந்தது. 2020ஆம் ஆண்டு இந்த விகிதம் 69.8 விழுக்காடாகப் பதிவானது.
மேலும், சென்ற ஆண்டு பல்கலைக்கழகப் பட்டக் கல்வியை முடித்த மாணவர்களுக்கு வழங்கப்படும் சம்பளமும் அதிகரித்ததாக நேற்று வெளியிடப்பட்ட கருத்தாய்வின் முடிவுகள் தெரிவித்தன.
சராசரியாக முழுநேர வேலையில் இருக்கும் ஒரு பட்டதாரியின் சம்பளம் சென்ற ஆண்டு 3,800 வெள்ளியாக இருந்தது. 2020ஆம் ஆண்டு ஒரு பட்டதாரியின் சராசரி சம்பளம் 3,700 வெள்ளி. 2019ஆம் ஆண்டு இது 3,600 வெள்ளியாக இருந்தது.
பல்கலைக்கழகத்தில் பட்டக் கல்வியை முடித்து ஆறு மாதங்களுக்குள் 94.4 விழுக்காட்டு மாணவர்கள் முழுநேர, பகுதிநேர அல்லது தன்னுரிமை வேலைகளில் சேர்ந்துகொண்டனர். 2020ஆம் ஆண்டு இந்த விகிதம் 93.6 விழுக்காடாகப் பதிவானது.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகம், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் முழுநேரப் பட்டக் கல்வியை மேற்கொண்ட 11,200 புதிய பட்டதாரிகளிடம் கருத்தாய்வு நடத்தப்பட்டது. சென்ற ஆண்டு நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி நிலவரப்படி அவர்களின் வேலை குறித்த விவரங்கள் கேட்டறியப்பட்டன.
சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகம், சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கான கருத்தாய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றின் முடிவுகள் பின்னர் வெளியிடப்படும்.
சிங்கப்பூரின் பொருளியல் சென்ற ஆண்டு 7.2 விழுக்காடு வளர்ச்சி கண்டது. 2020ஆம் ஆண்டில் பொருளியல் 5.4 விழுக்காடு சுருங்கியது.
2020ஆம் ஆண்டு பல்கல்கலைக்கழகப் பட்டதாரிகளிடையே வேலையின்மை விகிதம் 6.4 விழுக்காடாக இருந்தது. சென்ற ஆண்டு இந்த விகிதம் 5.6 விழுக்காட்டுக்குக் குறைந்தது.