மோசடிக்கு ஆளான 50 வயதைத் தாண்டிய ஒரு மாது தனது தொலைபேசி அழைப்புகளுக்குப் பதிலளிக்காததால் மூத்த விசாரணை அதிகாரியான குவெக் கீ பூன் கடந்த மாதம் அவரின் வீட்டிற்குச் சென்றிருக்கிறார். வீட்டிலிருந்து வரும் எரிவாயுவின் வாசத்தை அவரால் உணரமுடிந்தது.
வீட்டில் அந்த மாது எரிவாயுவை அளவுக்கதிகமாக நுகர்ந்து செயலிழந்த நிலையில் கிடந்தார். வீட்டின் கதவைக்கூட திறக்க முடியாததால் அவர் மரக்கட்டையால் செய்யப்பட்ட கோலைக் கொண்டு திறந்தார்.
ஏமாற்றுக்காரர்களிடம் வாழ்க்கைத் தேவைகளுக்காகத் தான் சேமித்திருந்த 100,000 வெள்ளியை இழந்ததால் தனது உயிரை மாய்க்க முயன்றதாக அந்த மாது தெரிவித்தார்.
மோசடிகளைத் தடுக்க காவல்துறையினர் எடுக்கும் முயற்சிகளை எடுத்துச்சொல்ல மூத்த விசாரணை அதிகாரி குவெக் இச்சம்பவத்தை விவரித்தார். செய்தியாளர் கூட்டத்தில் அவர் பேசினார்.
திரு குவெக், வர்த்தக விவகாரப் பிரிவின்கீழ் உள்ள மோசடி தடுப்புப் பிரிவைச் சேர்ந்தவர். மோசடிகளைத் தடுக்கக் காவல்துறை எடுக்கும் முயற்சிகளை இப்பிரிவு கவனித்து வருகிறது.
சில வேளைகளில் மோசடிகளுக்கு ஆளாவோர் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சி செய்வதும் உண்டு என்பது வலியுறுத்தப்படுகிறது.
சென்ற ஆண்டு செப்டம்பர், நவம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் தீவு முழுவதும் மூன்று மோசடி தடுப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றில் மட்டுமே 135 தனிநபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
தொலைத்தொடர்பு நிறுவனங்கள், மின்வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுடன் இணைந்து செயல்பட்டும் ஏமாற்றுக்காரர்களைப் பிடிக்கும் முயற்சிகளைக் காவல்துறை எடுத்து வருகிறது.
சென்ற ஆண்டு 12,600க்கும் அதிகமான வங்கிக் கணக்குகளை முடக்கி மோசடிகளுக்குப் பறிபோன 102 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான தொகையை காவல்துறை மீட்டெடுத்தது.

