காவல்துறையும் தேசியக் குற்றத் தடுப்பு மன்றமும் இணைந்து மோசடிச் சம்பவங்களுக்கு எதிரான விழிப்புணர்வைத் தூண்டும் இசைக் காணொளியை வெளியிட்டுள்ளன. காவல்துறையின் பல்வேறு முயற்சிகளில் இதுவும் ஒன்று.
20 முதல் 39 வயதானவர்கள், மின்வழிப்பறி, வேலை, மின்வர்த்தகம், முதலீடு, கடன் ஆகியவை தொடர்பான மோசடிகள், சீன அதிகாரியைப் போன்ற ஆள்மாறாட்டம், போலியான சூதாட்டத் தளம் எனப் பல்வேறு மோசடிகளுக்கு ஆளாவதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் மோசடி நிலவரம் குறித்த கேள்விக்குப் பதிலளித்துப் பேசிய உள்துறைத் துணையமைச்சர் டெஸ்மண்ட் டான் இதனைத் தெரிவித்தார். இசைக் காணொளி மட்டுமின்றி, காவல்துறை வேறு சில மோசடித் தடுப்புத் திட்டங்களையும் நடைமுறைப்படுத்தியுள்ளது.
சென்ற ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி தொடங்கிய விழிப்புணர்வுத் திட்டத்தின் கீழ், முதலீட்டு மோசடிகளில் எளிதில் ஏமாறக்கூடியோரை அடையாளம் கண்டு காவல்துறை எச்சரிக்கை அனுப்புகிறது.
விதிமுறைகளுக்கு உட்படாத முதலீட்டு விளம்பரங்களைச் செய்வதாகச் சந்தேகிக்கப்படும் 'வாட்ஸ்அப்' குழுக்களின் படங்களை அதிகாரிகள் ஊழல் எதிர்ப்பு நிலையத்திடம் சமர்ப்பிப்பர். அதில் காணப்படும் உள்ளூர்த் தொலைபேசி எண்களுக்குத் தானியக்க முறையில் ஆலோசனைகள் அனுப்பப்படும்.
சென்ற டிசம்பர் இறுதிக்குள் 1,300க்கும் மேலானோர் அத்தகைய ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டனர்.
கவ்டெக், தேசியக் குற்றத் தடுப்பு மன்றம் ஆகியவை உருவாக்கிய ஸ்கேம்ஷீல்டு செயலி 2020இல் அறிமுகமானது.
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி மோசடிக் குறுந்தகவல்களை அடையாளம் கண்டு தவிர்க்கவும், பாதிக்கப்பட்டோர் புகாரளித்த மோசடித் தொலைபேசி எண்ணிலிருந்து வரும் அழைப்பை நிராகரிக்கவும் இது உதவுகிறது.
இத்தகைய நடவடிக்கைகளின் வாயிலாகவும் காவல்துறையினர் மோசடிகளைத் தடுக்கும் முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

