‘விடிஎல்’ எனப்படும் தடுப்பூசி போட்டவர்களுக்கான பயணத் தடத் திட்டத்தின்கீழ் கூடுதல் நாடுகளுக்கு விமானச் சேவை வழங்க சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஸ்கூட் ஆகிய நிறுவனங்கள் தயாராகிவருகின்றன.
25 நாடுகளில் உள்ள 47 நகரங்களுக்கு விடிஎல் விமானச் சேவைகள் விரிவுப்படுத்தப்படும் என சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவித்தது.
துபாய், ஹாங்காங், மணிலா, நியூயார்க், புக்கெட் ஆகிய இடங்கள் இதில் அடங்கும்.
அதோடு, கொழும்பு, நோம் பென், மாலத் தீவுகள், பண்டார் ஸ்ரீ பகவான் உள்ளிட்ட இடங்களுக்கு அன்றாட விமானச் சேவைகள் அதிகரிக்கப்படும் என சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கூறியது.
இதற்கிடையே, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ஸ்கூட் விமான நிறுவனம் லண்டன், கிராபி, சியாங் மாய் போன்ற இடங்களுக்கு விடிஎல் சேவைகளை விரிவுப்படுத்தவுள்ளது.
தற்போது 24 நாடுகளுடன் சிங்கப்பூருக்கு விடிஎல் ஏற்பாடு உள்ளது.
மேலும் பல நாடுகளுக்கு திட்டத்தை விரிவுபடுத்தும் நோக்கில், கத்தார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் ஆகிய நாடுகளுடன் பிப்ரவரி 25ஆம் தேதி முதல் விடிஎல் தொடங்கவுள்ளது.