கொவிட்-19 தொடர்பில் 2020ஆம் ஆண்டு, சென்ற ஆண்டு வரவுசெலவுத் திட்டங்களில் அறிவிக்கப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் கூடுதல் சிங்கப்பூர் வாசிகளுக்குத் தொடர்ந்து வேலை கிடைப்பதை உறுதிசெய்யவும் பொருளியலுக்கு அதிக பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவும் சிங்கப்பூரால் முடிந்தது என்று நிதி அமைச்சு ஆய்வு அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் வழங்கிய ஆதரவுத் திட்டங்கள் கொள்ளைநோய்ப் பரவல் நீண்டகாலத்துக்கு ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளைக் குறைக்க உதவின. பொருளியல், மனிதவள மூலதனம் ஆகிய அம்சங்களில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அவற்றில் அடங்கும்.
முக்கியமான கொவிட்-19 ஆதரவுத் திட்டங்கள் ஆராயப்பட்டன. இந்த முதற்கட்ட ஆய்வு முடிவுகள், வரவுசெலவுத் திட்டங்களில் அறிவிக்கப்பட்ட கொவிட்-19 நடவடிக்கைகளின் தாக்கத்தை அலசும் நிதி அமைச்சின் மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டன.
சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் இைடக்கால அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. இப்போது வெளியிடப்பட்டுள்ள அறிக்கை மேல்விவரங்களை வழங்குகிறது.
நிறுவனங்களுக்கும் அரசாங்கத்துக்கும் இருக்கும் கடனும் அவ்வளவாக அதிகரிக்கவில்லை என்பதும் வரவுசெலவுத் திட்டங்களின் முக்கிய நடவடிக்கைகளை ஆராய்ந்த முதற்கட்ட ஆய்வின் முடிவுகள் தெரிவித்தன. உயர்கல்வி நிலையங்களில் பயின்ற புதிய பட்டதாரிகளின் வேலை வாய்ப்புகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படவில்லை என்பதும் தெரியவந்தது.
நெருக்கடி காலத்தில் வேலையின்மை விகிதம் கூடுவதுடன் அது தொடர்ந்து அதிகமாக இருப்பதற்கான சாத்தியம் இருப்பதையும் நிதி அமைச்சின் ஆய்வு அறிக்கை தெரிவித்தது. இதனால் வேலை தேடுவோர் மனந்தளர்ந்து ஊழியரணியிலிருந்து வெளியேறக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டது.
அத்தகைய சூழலை சிங்கப்பூர் இதுவரை தவிர்த்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

