காலாங்/வாம்போவில் மையப் பகுதி அரசு முன்மாதிரி திட்ட பிடிஓ வீடுகள் கட்டப்படும்
வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் மொத்தம் 3,953 பிடிஓ வீடுகளை விற்பனைக்கு விட்டுள்ளது. அவற்றில் காலாங்/வாம்போவில் உள்ள 398 வீடுகளும் உள்ளடங்கும். வீவக நேற்று இதனை அறிவித்தது.
காலாங்/வாம்போ வீடுகள், மையப் பகுதி அரசாங்க முன்மாதிரி வீடுகள் திட்டத்தின்கீழ் விற்பனைக்கு விடப்படும் இரண்டாம் கட்ட வீடுகள் ஆகும். இவற்றை மறுவிற்பனைக்கு உட்படுத்தும்போது 6% மானியத்தைத் திருப்பிச் செலுத்த வேண்டி இருக்கும்.
புதிதாக விற்பனைக்கு கொடுக்கப்படும் வீடுகள் நான்கு குடியிருப்புப் பேட்டைகளில் கட்டப்படும் ஆறு வீட்டு திட்டங்களில் அமைந்து இருக்கும். இந்த ஆண்டில் முதன்முதலாக அந்த வீடுகள் விற்பனைக்குக் கொடுக்கப்படுகின்றன.
அந்த வீடுகளின் சாவியைப் பெற சுமார் மூன்று முதல் ஐந்தாண்டுகள் காத்திருக்கவேண்டும். காலாங்/வாம்போ வீடுகள் 33 மற்றும் 47 மாடிகளைக் கொண்ட இரு கட்டடங்களைக் கொண்டுள்ள ஒரே புளோக்கை சேர்ந்த மூவறை, நான்கறை வீடுகளாக இருக்கும்.
கிங் ஜார்ஜஸ் அவென்யூ, சையது ஆல்வி ரோடு, ரோச்சோர் கெனால் ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்டு அந்த இடம் அமைந்துள்ளது.
இத்தகைய புதுமாதிரி வீடுகளை ரோச்சோரில் கட்டுவதற்கான முதல் திட்டம் சென்ற ஆண்டு நவம்பரில் அறிவிக்கப்பட்டது.
புதிதாக கட்டப்படும் அந்த மூவறை வீட்டின் விலை மானியம் இல்லாமல் $353,000 முதல் $462,000 வரை இருக்கும். நாலறை வீட்டின் விலை $488,000 முதல் $675,000 வரை இருக்கும்.
இந்த விலை, ரோச்சோர் பிடிஓ திட்ட வீடுகளின் விலையைவிட குறைவு. காலாங்/வாம்போ வீடுகளின் தரைப்பரப்பு, புதிதாக விற்பனைக்கு வரும் பிடிஓ திட்ட வீடுகளின் தரைப்பரப்பைவிட சிறியதாக இருக்கும். இந்த வீடுகளைப் பெற 59 மாதங்கள் காத்திருக்க வேண்டி இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.
இந்த வீடுகள் 2027 மூன்றாவது காலாண்டில் கட்டி முடிக்க திட்டமிடப்படுகிறது.
இந்த வீடுகளை வாங்குவோர் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் குடியிருந்துவிட்டு பிறகுதான் வீட்டை பொதுச் சந்தையில் விற்க முடியும்.
சாதாரண பிடிஓ வீடுகளை, ஐந்தாண்டு குடியிருந்தபிறகு விற்கலாம். மானியத்தைத் திருப்பி கொடுக்க வேண்டிய தேவையும் இல்லை.
கேலாங்கில் டக்கோட்டா கிரஸ்டில் இடம்பெறும் பிடிஓ திட்டத்தில் 443 ஈரறை, மூவறை, நான்கறை வீடுகள் கட்டப்படும். இவை மூன்று புளோக்குகளில் அமைந்திருக்கும்.
ஈசூனில் முதிர்ச்சியடையாத பேட்டையில் இரண்டு பிடிஓ திட்ட வீடுகள் கட்டப்படும். அந்தத் திட்டங்களில் 987 மற்றும் 852 வீடுகள் இருக்கும். மற்ற வீடுகளுடன் ஒப்பிடுகையில் இந்த வீடுகளின் விலை குறைவாக இருக்கும். அதிக காலம் காத்திருக்கவும் தேவையில்லை.
தெங்காவில் இரண்டு பிடிஓ திட்டங்களில் 713 வீடுகளும் 560 வீடுகளும் கட்டப்படும். இந்த வீடுகளைப் பெற 36 மாதங்கள் காத்திருக்க வேண்டி இருக்கலாம்.
வரும் மே மாதம் புக்கிட் மேரா, ஜூரோங் வெஸ்ட், கிம் மோ, தோ பாயோ, ஈசூனில் சுமார் 5,300 வீடுகள் விற்பனைக்குக் கிடைக்கும்.
அங் மோ கியோ, புக்கிட் மேரா, சுவா சூ காங், ஜூரோங் ஈஸ்ட், குவீன்ஸ்டவுன், உட்லண்ட்ஸ் ஆகிய பகுதிகளில் ஆகஸ்ட்டில் மேலும் 6,300 முதல் 6,800 வீடுகள் விற்பனைக்கு வரும்.
வீவக இந்த ஆண்டிலும் அடுத்த ஆண்டிலும் ஒவ்வோர் ஆண்டும் 23,000 வரையிலான பிடிஓ திட்ட வீடுகளை விற்பனைக்கு விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

