சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு ஆதரவு
கொவிட்-19 சவால்களைச் சமாளிக்கத் திணறும் சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்குக் கைகொடுக்க, 500 மில்லியன் வெள்ளி மதிப்பிலான வேலை, தொழில் ஆதரவுத் தொகுப்புத் திட்டம் 2022ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தகுதிபெறும் சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு, உள்ளூர் ஊழியர் ஒருவருக்கு ஆயிரம் வெள்ளி என்ற அடிப்படையில் அதிகபட்சம் பத்தாயிரம் வெள்ளி வழங்கப்படும்.
உணவு-பானம், சில்லறை விற்பனை, நிகழ்கலை, விளையாட்டு வசதிகள், திரையரங்குகள், வரலாற்றுத் தலங்கள், உள்ளரங்க விளையாட்டு வசதிகள், குடும்ப கேளிக்கை நிலையங்கள் உள்ளிட்டவை அதற்குத் தகுதிபெறும்.
சுற்றுப்பயணம், மாநாடு மற்றும் கண்காட்சி ஏற்பாடு போன்ற துறைகளைச் சார்ந்த நிறுவனங் களுக்கும் அது பொருந்தும்.
சென்ற டிசம்பர் 31ஆம் தேதி நிலவரப்படி, தகுதி பெறும் நிறுவனங்களின் வருடாந்திர செயலாக்க வருவாய் 100 மில்லியன் வெள்ளிக்கும் குறைவாக இருக்க வேண்டும் அல்லது 200க்கும் குறைந்த ஊழியர்களை வேலையில் அமர்த்தி இருக்க வேண்டும்.
உள்ளூர் ஊழியர்களை வேலைக்கு அமர்த்தாத உணவங்காடிகள், காப்பிக் கடை போன்றவற்றின் உரிமையாளர்களுக்கும் ஒருமுறை மட்டும் தரப்படும் வழங்கு தொகை அளிக்கப்படும் என்று நிதியமைச்சர் குறிப்பிட்டார்.
அரசாங்கம் இந்த ஆண்டு நிலையான மீட்சியை எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.
கிருமிப் பரவல் காலத்தில் வேலை இழந்த ஊழியர்களுக்கான கொவிட்-19 மீட்சி மானியம் இந்த ஆண்டு இறுதிவரை நீட்டிக்கப் பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
வேலை உருவாக்க ஊக்குவிப்புத் திட்டம் செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படும். நீட்டிப்பு பற்றிய மேல் விவரங்கள் அமைச்சுகளின் செலவினத் திட்ட விவாதங்களில் பகிர்ந்துகொள்ளப்படும் என்று அமைச்சர் வோங் கூறினார்.
இதனிடையே, சிறிய, நடுத்தர நிறுவனங்கள் மின்னிலக்கமயமாகி தொழில் நடைமுறையை தானியக்கமயமாக்கி அவற்றின் மூலம் உற்பத்தித் திறனைப் பெருக்கு வதற்கு உதவும் வகையில் $600 மில்லியன் தொகை புதிய வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
சிறிய, நடுத்தர நிறுவனங் களைப் பொறுத்தவரை பரந்த அளவிலான அடிப்படையில் அவற்றின் உற்பத்தித்திறனைப் பெருக்குவதே நமது முன்னுரிமை என்று நிதி அமைச்சர் தெரிவித்தார்.
இந்த நிதி ஆதரவின் மூலம் அடுத்த நான்காண்டுகளில் 100,000க்கும் மேற்பட்ட உற்பத்தித் திறன் திட்டங்களுக்கு ஆதரவு கிடைக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.
உள்ளூர் நிறுவனங்கள் ஆய்வு, மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள மேலும் ஆதரவை அரசாங்கம் வழங்கும்.
உள்ளூர் நிறுவனங்களுக்கும் பலதுறை தொழில் கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் உள்ள 80 தொழில்நுட்ப புத்தாக்க நிலையங்களுக்கும் இடையில் மேலும் ஒத்துழைப்பு இடம்பெறுவதைக் காண தான் விரும்புவதாக அமைச்சர் தெரிவித்தார்.
உள்ளூர் நிறுவனங்கள் மற்றும் ஊழியர் அணியின் மின்னிலக்க ஆற்றல் மேம்படுவதற்கான திட்டங்களையும் அடுத்த சில ஆண்டு களில் கூடுதலாக $200 மில்லியன் தொகையை ஒதுக்கி அரசாங்கம் மேம்படுத்தும் என்றும் திரு வோங் அறிவித்தார்.

