சிங்கப்பூரில் வட்டார தலைமையகத்தை அமைக்கும் பயோஎன்டெக் போன்ற நிறுவனங்கள் சிங்கப்பூரர்களுக்கு நல்ல வேலைகளை உருவாக்கித் தரும் என்று நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
உயிரியல் தொழில்நுட்பத் துறையில் வேலை பார்க்க விரும்பும் மக்களுக்கு இத்தகைய நிறுவனங்களில் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும்.
கொவிட்-19 சூழ்நிலையை திறம்பட கையாண்டு அதே நேரத்தில் மேலும் முதலீடுகளையும் புத்தாக்கத் திட்டங்களையும் சிங்கப்பூர் கவர்ந்து ஈர்த்து இருக்கிறது என்று நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.
கொரோனா தொற்று தொடர்பில் நாம் செயல்பட்ட விதம் மற்ற நாடுகளில் இருந்து நம்மை தனிமைப்படுத்திக் காட்டியது.
"நாம் விமான நிலையத்தை, துறைமுகத்தைத் திறந்தே வைத்து இருந்தோம். முக்கியமான பொருள் சேவைகள் வந்து செல்வதற்கு இடையூறு இல்லாமல் பார்த்துக்கொண்டோம். நம்பிக்கைக்கு உகந்த நாடு என்ற நம்முடைய நற்பெயரை நன்கு பலப்படுத்திக் கொண்டோம்," என்று அமைச்சர் தெரிவித்தார்.
இந்த வட்டாரத்தில் புதிய சந்தைகளைத் தேடி விரிவடைய விரும்பும் உலக நிறுவனங்களுக்கு உத்திபூர்வ உந்துதளமாக சிங்கப்பூர் தொடர்ந்து திகழும் என்று தெரிவித்த அமைச்சர், பயோஎன்டெக் நிறுவனத்தை எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்டார். ஜெர்மனியை சேர்ந்த அந்த நிறுவனத்தின் புதிய நிலையம் 2023ல் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு குறைந்தபட்சம் 80 பேருக்கு வேலை கிடைக்கும்.
இந்த விரிவாக்கத் திட்டத்திற்கு பொருளியல் வளர்ச்சிக் கழகம் ஆதரவு அளிக்கிறது.
சிங்கப்பூரில் நிறுவனங்களை அமைக்கவும் தலைமையகங்களை ஏற்படுத்தவும் உலக நிறுவனங்கள் புதிய முதலீடுகளை செய்கின்றன. திட்டம் தீட்டுகின்றன. அவற்றின் மூலம் சிங்கப்பூரர்களுக்கு நல்ல வேலைகள் கிடைக்கும் என்று திரு வோங் குறிப்பிட்டார்.