சிங்கப்பூர் நிறுவனங்கள் அவற்றின் ஊழியர்களுக்கான பயிற்சி மற்றும் உருமாற்றத் திட்டங்களை நடைமுறைப்படுத்த உதவும் நோக்கில், அரசாங்கம் 100 மில்லியன் வெள்ளியை ஒதுக்கியுள்ளது.
இந்த நிதியின் ஒரு பகுதி புதிய மானியத்திற்குச் செலவிடப்படும்.
உருமாற்றத் திட்டங்களை நடைமுறைப்படுத்த நிறுவன அளவிலான பயிற்சிக் குழுக்களை அமைத்திருக்கும் நிறுவனங் களுக்கு அந்த மானியம் உதவும் என்று நிதியமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்தார்.
நிறுவனப் பயிற்சிக் குழுக்களில், நிர்வாகம், ஊழியர் சங்கத் தலைவர்கள் என இரு தரப்புப் பிரதிநிதிகளும் இடம்பெற்றிருப்பர்.
பயிற்சித் திட்டங்களை மறுஆய்வு செய்து, திறன் இடை வெளியைக் கண்டறிவது அவர்கள் பணி.
அத்துடன், ஊழியர்களுக்கான மறுதிறன் மேம்பாடு, பணி முன்னேற்றம் ஆகியவற்றைத் திட்டமிட்டு, புதிய பயிற்சித் திட்டங்களையும் அவர்கள் நடைமுறைப்படுத்துவர்.
நிறுவனப் பயிற்சிக் குழு அமைக்கும் திட்டம் 2019ல் அறிமுகமானது. அடுத்த மூவாண்டில் ஆயிரம் குழுக்களை அமைத்து 330,000 ஊழியர்களுக்கு உதவத் திட்டமிட்டிருப்பதாக தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி) கூறியிருந்தது.
இதுவரை சுமார் 800 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஊழியர் சங்கங்களையும், முதலாளிகளையும் ஒருங்கிணைக்கும் அத்தகைய நிறுவனப் பயிற்சிக் குழுக்கள் மூலம், உருமாற்றத்துக்குத் தேவையான பயிற்சித் திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.
மேம்பட்ட சம்பளம், ஊழியர் நலன் போன்றவற்றில் கவனம் செலுத்தும் அந்தத் திட்டங்கள் பின்னர் சம்பந்தப்பட்ட அரசாங்க அமைப்புகளின் ஆதரவோடு நடைமுறைப்படுத்தப்படுவதாக அமைச்சர் வோங் குறிப்பிட்டார்.
பெரிய நிறுவனங்கள், துறை சார்ந்த சிறிய நிறுவனங்களுக்குப் பயிற்சி மற்றும் ஆலோசனை வழங்கவும் முயற்சி எடுக்கப்படுகிறது.
அதன் தொடர்பில், வர்த்தகச் சங்கங்கள், சம்மேளனங்கள், சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனம் ஆகியவற்றுடன் இணைந்து அதிகாரிகள் செயல்படுவர் என்றும் தமது வரவுசெலவுத் திட்ட உரையில் அமைச்சர் குறிப்பிட்டார்.

