பாட்டாளிக் கட்சியின் தலைவரும் அல்ஜுனிட் குழுத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சில்வியா லிம்மின் கைபேசியை அரசாங்க அமைப்புகள் ஊடுருவவில்லை என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் நேற்று நாடாளுமன்றத்தில் கூறினார்.
இதுகுறித்து தற்காப்பு
அமைச்சின் பாதுகாப்பு, உளவியல் பிரிவிடம் கேட்டு உறுதி செய்துகொண்டதாக அவர் தெரிவித்தார்.
அரசாங்க அமைப்புகள் தமது ஐஃபோன் கைபேசியை ஊடுருவியிருக்கக்கூடும் என்று ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்ததாக திருவாட்டி சில்வியா லிம் தெரிவித்திருந்தார்.
திருவாட்டி லிம்மின் கைபேசியை ஊடுருவிப் பெறப்பட்ட தகவல்கள் விற்கப்பட்டிருக்கலாம் என்று ஆப்பிள் நிறுவனம் அவரிடம் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.
திருவாட்டி லிம்முக்கு ஆப்பிள் அனுப்பியதாகக் கூறப்படும்
எச்சரிக்கைத் தகவலைப் பார்க்க விரும்புவதாக அமைச்சர் சண்முகம் கூறினார்.
அது திருவாட்டி லிம்முக்கு மட்டும் அனுப்பப்பட்டதா அல்லது பலருக்கு அனுப்பப்பட்டதா என்று அவர் கேள்வி கேட்டார்.
திருவாட்டி லிம்மின் கைபேசி உண்மையிலேயே ஊடுருவப்பட்டிருப்பது தெரியவந்தால் உள்துறை அமைச்சுக்கு அது கவலையைத் தரும் விவகாரமாக இருக்கும் என்றார் திரு சண்முகம்.
ஒருவேளை திருவாட்டி லிம் கூறுவது போல இருந்தால் அவரைப் போலவே மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் பாதிப்படையக்கூடும் என்றார் அவர்.
அவ்வாறு ஒரு நிலை ஏற்பட்டால் அந்த விவகாரம் குறித்து உள்துறை அமைச்சு தீவிர விசாரணை நடத்தும் என்று அமைச்சர் சண்முகம் கூறினார்.
இதற்கிடையே, இஸ்ரேலிய நிறுவனம் குவாடிரீம் உருவாக்கிய வேவுபார்க்கும் மென்பொருளை சிங்கப்பூர் அரசாங்கம் பயன்படுத்துகிறதா என்பது குறித்து நாடாளுமன்றத்தில் நேற்று கேள்வி எழுப்பப்பட்டது.
குவாடிரீம் அல்லது மற்ற வேவு பார்க்கும் மென்பொருளை சிங்கப்பூர் அரசாங்கம் பயன்படுத்துகிறதா என அல்ஜுனிட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லியோன் பெரேரா கேள்வி எழுப்பினார்.
அரசாங்கங்களுக்காக கைபேசி யை ஊடுருவி வேவுபார்க்கும் மென்பொருளை குவாடிரீம் நிறுவனம் உருவாக்குவதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இம்மாத தொடக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
இந்தச் சேவையைப் பெற்ற முதல் சில அரசாங்கங்களில் சிங்கப்பூர் அரசாங்கமும் ஒன்று என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அறிக்கை குறித்து சிங்கப்பூர் அரசாங்கம் அப்போது எவ்வித பதிலும் அளிக்கவில்லை.
இந்நிலையில் வேவுபார்க்கும் மென்பொருள் பற்றி திரு லியோன் பெரேரா கேட்ட கேள்விக்கு உள்துறை துணை அமைச்சர் டெஸ்மண்ட் டான் பதிலளித்தார்.
"தேசிய பாதுகாப்பை முன்னிட்டு அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்த தகவல்களை வெளியிட முடியாது. சிங்கப்பூரைப் பாதுகாப்புடன் வைத்திருப்பது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்புகளில் ஒன்று," என்றார் திரு டான்.
பயங்கரவாதம், வெளிநாட்டுக் குறுக்கீடு, வேவுபார்த்தல் போன்ற மிகக் கடுமையான தேசிய பாதுகாப்பு மிரட்டல்களை அரசாங்கம் எதிர்கொள்ள வேண்டியிருப்பதாக திரு டான் கூறினார்.
"இப்பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டுவர தேசிய பாதுகாப்பு தொடர்பாகப் பொறுப்பு வகிக்கும் அரசு அமைப்புகள், உளவியல் தொடர்பான ஆற்றல்களைப் பயன்படுத்தியே ஆக வேண்டும். அதில் தொழில்நுட்பமும் அடங்கும்," என்றார் திரு டான்.
இந்த விவகாரம் குறித்து திருவாட்டி லிம்மும் பேசினார்.
"எனது கைபேசியை ஊடுருவ எந்த ஓர் அரசாங்க அமைப்பும் முயற்சி செய்யவில்லை என்ற உத்தரவாதம் கிடைக்குமா?" என்று திருவாட்டி லிம் கேட்டார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், திருவாட்டி லிம் உளவியலில் ஈடுபட்டிருக்கிறாரா என மன்றத் தலைவர் இந்திராணி ராஜா கேள்வி எழுப்பினார்.
திறந்த மனதுடன் கேள்வி கேட்பதாக நாடாளுமன்றத்தில் கூறிய திருவாட்டி லிம், "எனது கைபேசியை ஊடுருவ அரசாங்க அமைப்புகள் முயற்சி செய்யுமா, செய்யாதா என்று எனக்குத் தெரியவில்லை. நான் சிங்கப்பூர் அரசாங்கம் மீது குற்றம் சுமத்தவில்லை.
"இதுகுறித்து விளக்கம் அறியவே கேள்வியைக் கேட்டேன். என்னால் பதிலளிக்க முடியாது என்று துணை அமைச்சர் கூறினால், அப்படியே ஆகட்டும்," எனத் தெரிவித்தார்.
திருவாட்டி லிம்மின் ஐஃபோனில் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டால் அதுகுறித்து காவல்துறையிடம் புகார் செய்யும்படி துணை அமைச்சர் டான் ஆலோசனை வழங்கினார்.

