முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட தங்குவிடுதிகளுக்கும் கட்டுமானம், கடல் பட்டறை மற்றும் செயல்முறைப் பொறியியல் துறைகளில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு இன்றுமுதல் அட்டவணை அடிப்படையிலான கொவிட்-19 பரிசோதனை நடைமுறை இருக்காது.
தங்குவிடுதிகள், வெளிநாட்டு ஊழியர்களுக்கான பொழுதுபோக்கு நிலையங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் முன்களப் பணியாளர்களுக்கும் இந்த விலக்கு வழங்கப்
படுவதாக தங்குவிடுதி நடத்துநர்களுக்கு மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது. ஓமிக்ரான் உரு
மாறியகிருமியின் வேறுபட்ட தன்மைகளுக்கு ஏற்ப தற்போதைய விதிமுறைகளை மாற்றியமைப்பதன் ஓர் அங்கமாக, ஊழியர்களுக்கு இவ்வாறு கொவிட்-19 பரிசோதனை நடவடிக்கைகள் தளர்த்தப்படுவதாக புதன்கிழமையன்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் கூறினார்.
'தொற்று இடைவெளி' அதாவது முதலில் கிருமித்தொற்றால் பாதிக்கப்படுபவர் தொற்றின் அறிகுறிகளை உணர்வதற்கும் அடுத்த நபர் தொற்றுக்கு ஆளாகி அறிகுறிகளை உணர்வதற்கும் இடையே உள்ள காலகட்டம் ஓமிக்ரானைப் பொறுத்தவரை இரண்டு நாள்களே. இந்தக் குறுகியகாலத்தில் அட்டவணை முறைப்படி பரிசோதனை செய்வது பயன் அளிக்காது என்று
அமைச்சுகள்நிலை பணிக்குழுவின் செய்தியாளர் கூட்டத்தில் அவர் குறிப்பிட்டார். உடல் நலமில்லை என்றால், உடனே 'ஏஆர்டி' பரிசோதனை செய்துகொண்டு
கிருமித்தொற்று இல்லை என்று உறுதிசெய்த பின் வெளியே போகலாம் என்று அவர் குறிப்பிட்டார்.
தடுப்பூசி போட்டிராத அல்லது முழுமையாகத் தடுப்பூசி போட்டிராத ஊழியர்கள் தங்குவிடுதியில் வசித்தால், மூன்று நாள்களுக்கு ஒருமுறை முதலாளியின் மேற்பார்வையில் 'ஏஆர்டி' பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
கொவிட்-19 தொற்றுக்கு ஆளாகும் இக்குறிப்பிட்ட பிரிவினருக்குக் கடும்பாதிப்பு ஏற்படும் சாத்தியம் அதிகம் என்பதால் அட்டவணை முறைப்படி பரிசோதனை செய்வதன் மூலம் அவர்களின் ஆரோக்கியத்தைக் கண்காணிக்க முடியும் என்று மனிதவள அமைச்சு அதன் அறிவுறுத்தலில் குறிப்பிட்டிருந்தது.
பிரானி, பாசிர் பாஞ்சாங் தங்கு விடுதிகளில் வசிக்கும் ஊழியர்களுக்கும் பரிசோதனையிலிருந்து விலக்கு அளிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டது.
திங்கட்கிழமை நிலவரப்படி, தங்குவிடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களில் 98 விழுக்காட்டினருக்கு முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டுவிட்டதாக தமது எழுத்துபூர்வ நாடாளுமன்ற பதிலில் மனிதவள அமைச்சர் டான் சீ லெங் குறிப்பிட்டிருந்தார்.

